PUBLISHED ON : ஜன 19, 2026 12:00 AM

'கடைசி நேரத்தில், 'பல்டி' அடித்தால், மக்கள் ஏற்றுக்கொள்வரா..' என, தேசியவாத காங்கிரஸ் கட்சியினரை கிண்டலடிக்கின்றனர், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிற அரசியல் கட்சியினர்.
இங்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில், 2023ல் பிளவு ஏற்பட்டது.
சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரசிலிருந்து வெளியேறி, பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமானார். அதற்கு பின், தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவர் கைப்பற்றி விட்டார். சரத் பவார், 'சரத் சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ்' என்ற கட்சியை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் ஆகிய மாநகராட்சிகளில் மட்டும் தேசியவாத காங்கிரசின், இரண்டு அணிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
'மாநில அளவில் பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, உள்ளாட்சி தேர்தலில் சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது, அஜித் பவாரின் சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது...' என, பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், சரத் பவார் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இரண்டு மாநகராட்சிகளிலுமே அஜித் பவார் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, 'அனைத்து ராஜ தந்திரங்களும் வீணாகி விட்டதே...' என புலம்புகிறார், அஜித் பவார்.

