PUBLISHED ON : டிச 29, 2025 12:56 AM

'இனி எங்களுக்கு நல்ல காலம் தான்...' என, தெலுங்கானாவைச் சேர்ந்த, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2023ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி படுதோல்வி அடைந்தது.
இதனால், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்வடைந்திருந்தனர். அவர்களது தலைவர் சந்திரசேகர ராவோ, ஹைதராபாதில் உள்ள பண்ணை வீட்டில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வெடுத்து வந்தார்.
'இப்படியே தலைமறைவு வாழ்க்கை நடத்தினால், நம் கட்சி தொண்டர்கள் வேறு கட்சிக்கு ஓடிவிடுவர்...' என, சந்திரசேகர ராவுக்கு நெருக்கமானவர்கள், அவரிடம் எடுத்துக் கூறினர்.
இதையடுத்து, மீண்டும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கியுள்ளார், சந்திரசேகர ராவ். சமீபத்தில், கட்சி நிர்வாகிகளிடையே அவர் பேசுகையில், 'இதுவரை நிலைமை வேறு; இனி நடக்கப் போவது வேறு. தீவிர அரசியலில் ஈடுபடுவேன். எதிரிகளை சும்மா விட மாட்டேன்; தோலை உரிக்க வருகிறேன்' என, ஆளும் காங்கிரசை வெளுத்து வாங்கினார்.
இதைக் கேட்ட அவரது ஆதரவாளர்கள், 'சிங்கம் மீண்டும் களம் இறங்கிடுச்சு...' என, உற்சாகத்தில் உள்ளனர்.

