PUBLISHED ON : ஜூலை 23, 2026 01:42 AM

'மூத்த அரசியல் தலைவர் என்றும் பாராமல், இப்படி அவமதிக்கின்றனரே...' என கவலைப்படுகிறார், மத்திய பிரதேச மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான நரோத்தம் மிஸ்ரா.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, செல்வாக்குள்ள தலைவர் களில் நரோத்தம் மிஸ்ராவும் ஒருவர்.
கடந்த 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், முதல்வராக பதவியேற்பது யார் என்ற போட்டியில், நரோத்தம் மிஸ்ராவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால், தாடியா தொகுதியில் நரோத்தம் மிஸ்ரா தோல்வி அடைந்ததால், முதல்வராகும் அவரது கனவு தகர்ந்தது.
தாடியா தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேந்திர பாரதி, வங்கி மோசடி வழக்கில் சிக்கியதால், அவரது பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தொகுதிக்கு வரும் 30ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
இதில் வெற்றி பெற்று, எப்படியாவது அமைச்சராகி விடலாம் என்ற கனவில் இருந்தார் நரோத்தம் மிஸ்ரா; இதற்காக, கடந்த நான்கு மாதங்களாக அந்த தொகுதியிலேயே முகாமிட்டு, தேர்தல் பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில், அந்த தொகுதியில் நரோத்தம் மிஸ்ராவை கழற்றி விட்டு, அஷுதோஸ் திவாரி என்பவருக்கு வாய்ப்பு அளித்தது, பா.ஜ., மேலிடம். இதனால், விரக்தியில் இருக்கும் நரோத்தம் மிஸ்ரா, 'என் நிலைமை இவ்வளவு மோசமாகி விட்டதே...' என புலம்புகிறார்.
