PUBLISHED ON : டிச 03, 2025 12:30 AM

'தேர்தல் நேரத்தில் பேசுவதை எல்லாம் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு விவாதிப்பது சரியல்ல...' என முணுமுணுக்கின்றனர், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஆளும் கூட்டணியினர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஆளும் கூட்டணியினர், ஒரே ஒரு விஷயத்தை தான் முன்னிலைப்படுத்தினர்.
'எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ், வாரிசு அரசியல் நடத்துகிறார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், அந்த கட்சியின் தலைவராக உள்ளார். லாலுவின் மகள் எம்.பி.,யாக உள்ளார்.
'லாலுவின் மனைவி ரப்ரி தேவியும் தீவிர அரசியலில் உள்ளார். நம் நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, பல ஆண்டுகளாகி விட்டன. ஆனாலும், லாலு பிரசாத் போன்றவர்கள் வாரிசு அரசியல் நடத்துவதன் வாயிலாக, இன்னும் மன்னராட்சி காலத்தில் வாழ நினைக்கின்றனர்...' என, பிரசாரம் செய்தனர்.
தேர்தலில், ஆளும் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது; லாலு பிரசாத் யாதவ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், 'நிதிஷ் குமார் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசில், அமைச்சர்களாக இருப்பவர்களில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர், அரசியல்வாதிகளின் வாரிசுகள் தான்...' என, லாலு கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
ஆளும் கூட்டணியினரோ, 'அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா...' என, கிண்டலாக கூறுகின்றனர்.

