PUBLISHED ON : மார் 12, 2026 01:58 AM

'கட்சி கலாசாரம், பாரம்பரியத்தை எல்லாம் இப்போது அனைவரும் மறந்து விட்டனர்...' என கவலைப் படுகின்றனர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை, காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலானோர், கதராடைகளைத் தான் அணிந்தனர். வட மாநிலங்களைச் சேர்ந்த காங்., தலைவர்கள், வெள்ளை நிற குர்தாவும், தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வெள்ளை சட்டை, வேஷ்டியும் அணிவர்.
வயது வித்தியாசம் இன்றி, மூத்த தலைவர்கள் முதல், இளம் வயது நிர்வாகிகள் அனைவரும் இந்த உடை கலாசாரத்தையே பின்பற்றினர்; ஆனால், சமீபகாலமாக இதில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், வித விதமான நிறங்களில் சட்டை, ஜீன்ஸ் பேன்ட் அணிகிறார். பார்லிமென்டிற்கு கூட, இதுபோன்ற உடைகளைத் தான் அணிந்து வருகிறார்.
கோடை காலங்களில், டி - ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிகிறார். கட்சி நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், பேரணி உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ராகுல் இப்படித்தான் வருகிறார்; மறந்தும் கூட, கதராடை அணிவது இல்லை. ராகுலை பின்பற்றி, காங்கிரசின் மற்ற எம்.பி.,க்களும் இதுபோல் கலர் கலரான உடைகளை அணிந்து வலம் வருகின்றனர்.
இதைப் பார்த்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், 'காலம் மாறிப்போச்சு...' என, புலம்புகின்றனர்.

