PUBLISHED ON : செப் 11, 2026 02:04 AM

'கடுமையானவர் என்ற பிம்பத்துடன், இனியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை, உத்தர பிரதேச மாநில முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் உணர்ந்து விட்டார்...' என்கின்றனர், அம்மாநில மக்கள்.
உ.பி.,யில், 2017 மற்றும் 2022ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற யோகி ஆதித்யநாத், ஒன்பது ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
'மிகவும் கடுமையானவர்; யாருடனும் நெருங்கி பழக மாட்டார்...' என, ஆதித்யநாத் மீது ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், 'அடுத்தாண்டு நடக்கவுள்ள உ.பி., சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க, இது சரி வராது' என, ஆதித்யநாத்துக்கு, சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். இதையடுத்து, அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிழக்காசிய நாடான ஜப்பானில் இருந்து, சமீபத்தில் சில மாணவர்கள் உ.பி.,க்கு வந்திருந்தனர். அவர்கள், முதல்வர் ஆதித்யநாத்தை சந்தித்தனர். அப்போது சில மாணவர்கள், ஆதித்யநாத்தின் தோள் மீது கை போட்டபடி, 'செல்பி' எடுத்தனர். இதை பார்த்து அதிகாரிகள் பதற்றமாகி விட்டனர்.
ஆதித்யநாத்தோ, அதிகாரிகளை அமைதிப்படுத்தி விட்டு, தானும் அந்த மாணவர்களின் தோளில் கை போட்டபடி, அவர்களுடன் சகஜமாக கலந்துரையாடினார்.
இதை பார்த்த உ.பி., மக்கள், 'இளைய தலைமுறையினரை கவர்ந்தால் தான், ஆட்சியை தக்கவைக்க முடியும் என்பதால், அதற்கான செயலில் இப்போதே ஆதித்யநாத் இறங்கி விட்டார் போலும்...' என்கின்றனர்.
