PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM

'தொடர்ந்து, 15 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து பழகி விட்டார்; இனி அவரது நடவடிக்கை எப்படி இருக்கும், அவர் எப்படி செயல்படுவார் என்றே தெரியவில்லை...' என, மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பற்றி கூறுகின்றனர், அந்த மாநில மக்கள்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றுள்ளார்.
தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று, முதல்வர் பதவியில் கம்பீரமாக அமர்ந்திருந்த மம்தாவால், இந்த தேர்தல் தோல்வியை ஜீரணிக்கவே முடியவில்லை.
'தேர்தல் கமிஷ னும், மத்திய அரசும் சேர்ந்து பழிவாங்கி விட்டன என, தன் தோல்விக்கு சொதப்பலான காரணத்தை கூறினாலும், மக்கள் அவரை புறக்கணித்து விட்டனர் என்பது உண்மை தானே...' என, பா.ஜ.,வினர் கூறுகின்றனர்.
தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத மம்தா, தன் கட்சி நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் உள்ளார். தேர்தல் போக்கு குறித்து, தன்னிடம் உண்மையை சொல்லாமல், கட்சி நிர்வாகிகள் மறைத்து விட்டதாக குமுறுகிறார்.
இதையடுத்து, தோல்விக்கு காரணமான நிர்வாகிகளை களையெடுக்க தயாராகி வருகிறார். ஆனால், கட்சியினரோ, 'ஆளுங்கட்சி என்ற பெருமையை இழந்து, எதிர்க்கட்சி வரிசைக்கு கீழிறங்கி விட்டோம். இனி கட்சி பதவியில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன...' என ஆவேசப்படுகின்றனர்.
