PUBLISHED ON : மே 14, 2026 12:00 AM

'ஏதாவது ஒரு பதவியில் அமர்ந்து விட வேண்டும் என துடியாய் துடிக்கிறார்...' என, பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் பற்றி கூறுகின்றனர், அங்குள்ள மக்கள்.
பீஹாரில், முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்தாண்டு நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், லாலு பிரசாத் யாதவ் தலைமை யிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் தோல்வி அடைந்தது. தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன், தன் மகன் தேஜ் பிரதாப்பை கட்சியிலிருந்து நீக்கினார், லாலு பிரசாத் யாதவ். இதனால் கடுப்பான தேஜ் பிரதாப், ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கி, தேர்தலில் களம் இறங்கினார்.
இந்த தேர்தலில், தேஜ் பிரதாப் தோல்வி அடைந்ததுடன், அவரது கட்சியும் தோல்வி அடைந்தது. இதனால், கடந்த ஓராண்டாக அமைதியாக இருந்தார் , தேஜ் பிரதாப். இப்போது மெல்ல மெல்ல, மீண்டும் தன் அரசியல் நகர்வுகளைத் துவக்கியுள்ளார்.
சமீபத்தில், தன் தந்தை லாலு பிரசாத் யாதவை சந்தித்து ஆசி பெற்றதுடன், தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பிரபல ஜோதிடர் ஒருவரை அழைத்து வந்து, தன் அரசியல் எதிர்காலம் குறித்தும் விரிவாக ஆலோசனை கேட்டுள்ளார், தேஜ் பிரதாப்.
பீஹார் மக்களோ, 'எத்தனை ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டாலும், மக்களிடம் ஓட்டு வாங்கினால் தான் அரசியலில் நிலைக்க முடியும்...' என, கிண்டலடிக்கின்றனர்.
