PUBLISHED ON : ஆக 30, 2026 01:52 AM

'இந்த முறை, ஒரு கை பார்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலும்...' என, சமாஜ்வாதி கட்சி தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 2017, 2022ல் நடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும், பா.ஜ.,வே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி, அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. இதற்கான வேலைகளை, அந்த கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் தீவிரமாக செய்து வருகிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அயோத்தி தொகுதி வேட்பாளராக, தன் கட்சியின் மூத்த தலைவரான பவன் பாண்டேவை தற்போதே அகிலேஷ் அறிவித்து விட்டார்.
பிரசித்தி பெற்ற ராமர் கோவில், இந்த அயோத்தி தொகுதியில் தான் உள்ளது. 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், அயோத்திக்கு உட்பட்ட பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பெற்றது.
எனவே, இந்த முறையும் வெற்றிக் கணக்கை அயோத்தியில் இருந்தே தொடங்க அகிலேஷ் விரும்புகிறார். 'அவரது விருப்பம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்' என்கின்றனர், உ.பி., மக்கள்.
