PUBLISHED ON : ஏப் 12, 2025 12:00 AM

'ஆரம்பத்திலேயே தட்டி வைக்காவிட்டால், அப்புறம் ரொம்ப சிரமம்...' என, ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பற்றி கவலையுடன் பேசுகின்றனர், தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆளும் கூட்டணியில், பிரபல தெலுங்கு நடிகரான, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் அங்கம் வகிக்கிறது. துணை முதல்வராக உள்ள பவன் கல்யாணின் செயல்பாடுகள், தெலுங்கு தேசம் கட்சியினரை கவலையில் தள்ளியுள்ளது.
அரசு நிர்வாகம் தொடர்பான முக்கிய முடிவுகளை, முதல்வரைகலந்தாலோசிக்காமல் அறிவிப்பது, தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பது என, 'சூப்பர் முதல்வர்' போல் பவன் கல்யாண் செயல்படுவதாக, தெலுங்கு தேசம் கட்சியினர் புலம்புகின்றனர்.
'அடுத்த தேர்தலில், தன் கட்சியை முன்னிலைப்படுத்தி, தேர்தலை சந்தித்து முதல்வர் பதவியை கைப்பற்றும் நோக்கமும் பவன் கல்யாணுக்கு உள்ளது. அவர் விஷயத்தில் நாம் கொஞ்சம்உஷாராக இருக்க வேண்டும்...' என, சந்திரபாபு நாயுடுவிடம் எச்சரித்துள்ளனர், அவரது கட்சியின் மூத்த தலைவர்கள்.
'பவன் கல்யாண் விவகாரமான ஆள். தேவையில்லாமல் அவருடன் கூட்டணி சேர்ந்து, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டோமே...' எனக் கவலைப்படுகிறார் சந்திரபாபு நாயுடு.

