PUBLISHED ON : மே 27, 2026 12:00 AM

'ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் கூட முடிந்து விடும்; இவர்களது பஞ்சாயத்து தீரவே தீராது போலும்...' என, கர்நாடக காங்கிரசில் நடக்கும் கருத்து வேறுபாடு குறித்து பேசுகின்றனர், அங்குள்ள மக்கள்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் மாநில தலைவரான சிவகுமார், துணை முதல்வராக உள்ளார்.
இங்கு, 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும், முதல்வர் யார் என்பதில், சித்தராமையாவுக்கும், மாநில காங்., தலைவர் சிவகுமாருக்கும் கடும் போட்டி நிலவியது.
முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமாரும் முதல்வராக இருப்பது என முடிவு செய்யப்பட்டதாக, தகவல்கள் வெளியாகின. ஆனால், ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையிலும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா மறுக்கிறார்.
இந்நிலையில், தன் 64வது பிறந்த நாளை சிவகுமார் சமீபத்தில் கொண்டாடினார். இதற்காக, அவரது ஆதரவாளர்களால் மாநிலம் முழுதும் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவை அனைத்திலும், 'வருங்கால முதல்வர்' என அச்சிடப்பட்டிருந்தது.
சிவகுமாரிடம் இது குறித்து கேட்டபோது, 'என் மீது அன்பு உள்ளவர்கள், இதை செய்திருக்கலாம்; மற்றபடி, எனக்கும், இந்த போஸ்டர்களுக்கும் சம்பந்தம் இல்லை...' என்றார்.
கர்நாடக மக்களோ, 'பேசாமல், கர்நாடகாவுக்கு இரண்டு முதல்வர்கள் என அறிவித்து விட்டால், இந்த பிரச்னைக்கு முடிவு வந்துவிடும்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.
