PUBLISHED ON : ஜூலை 14, 2011 12:00 AM
அலைகளில் இருந்து மின்சாரம்
''காற்று அடிக்கவில்லை, மின்சாரம் தயாரிக்க முடியவில்லை'' என விளக்கம் தருவதை விட, புதிய முறைகளில் மின்சாரம் தயாரிப்பதற்கான பல்வேறு நுட்பங்கள் அவசியமாகும்.
இந்தியா போன்று, பரந்து நீண்ட கடற்கரை உள்ள நாட்டில், கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையைப் பரவலாக்க வேண்டும். இந்த முறை நார்வே, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளன. கடல் அலைகளின் வேகமே, மின்சார தயாரிப்பில் முக்கிய காரணியாக உள்ளது. கடல் அலைகளில் பல வகைகள் உள்ளன. புவிஈர்ப்பு விசையால் தோன்றும் பூத அலைகளில் இருந்தே, அதிகளவில் மின்சாரம் தயாரிக்க முடியும். தமிழகத்தில் ஆயிரம் கி.மீ., கடற்கரை உள்ளது. கன்னியாகுமரி கடலில் அலைகள் உள்ளன. எனினும் அதில் காணப்படும் நிலையற்ற மாறுதல்கள், மின்சாரம் தயாரிக்க தடையாய் உள்ளன.
தகவல் சுரங்கம்
சிம்லா ஸ்பெஷல்
பஞ்சாப் மாநிலத்திற்கு, தலைநகராக சண்டிகர் உருவாக்கப்படும் வரை சிம்லா தான் தலைநகராக இருந்தது. 1971ல் இமாசலப்பிரதேசம் உருவாக்கப் பட்ட பின், சிம்லா புதிய மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. பைன், ஓக் மரங்கள் நிறைந்துள்ள சிம்லா பனிக் காலம், மழைக்காலம், கோடை காலம் என எல்லா காலங்களுக்கும் ஏற்ற மலைவாசஸ்தலமாகும். எனவே சிம்லாவை பிரிட்டிஷார் 'மலைகளின் இளவரசி' என அழைத்தனர். பிரிட்டிஷ் அரசு, சிம்லாவை இந்தியாவின் கோடைகால தலைநகராக 1864ல் அறிவித்தது. இந்த நிலை இந்தியா விடுதலை அடையும் வரை நீடித்தது. 'சியாமளா தேவி' என்ற அம்மனின் பெயரால் தான் சிம்லாவுக்கு பெயர் வந்தது. பஞ்சாப் மற்றும் வடமாநிலங்களின் புதுமண தம்பதியரின் தேனிலவு சொர்க்கமாக சிம்லா உள்ளது. சுற்றுலாவை மட்டுமே நம்பி சிம்லாவின் பொருளாதாரம் உள்ளது.

