/
தினம் தினம்
/
தினமலர் பவள விழா
/
தேசத்தையும், தெய்வத்தையும் போற்றும் நாளிதழ்!
/
தேசத்தையும், தெய்வத்தையும் போற்றும் நாளிதழ்!
PUBLISHED ON : அக் 23, 2025 12:00 AM

தேசம், தெய்வம் இரண்டையும் போற்றுவதும்; தேசத்தையே தெய்வமாகப் போற்றுவதும் சுதந்திர காலம் தொட்டு நல்லோர் பின்பற்றும் நெறி. அதையே 'தினமலர்' நாளிதழும் பின்பற்றுகிறது.
இன்று, 'தினமலர்' பல்வேறு கிளைகளாக தழைத்து மாபெரும் சக்தியாக வளர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியின் பின்னணியில் 'தினமலர்' நிறுவனர்
டி.வி. இராமசுப்பையர், முன்னாள் ஆசிரியர் மறைந்த இரா.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரது அயராத உழைப்பும், துணிச்சலும், பக்குவ முதிர்ச்சியும் இருக்கின்றன.
'தினமலர்' முன்னாள் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, என் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனின் நெருங்கிய நண்பராகவும், மதிப்பிற்குரியவராகவும் இருந்தவர். இருவருமே நாணயமானவர்கள் மட்டுமல்ல, நாணயவியல் அறிஞர்களும் கூட.
கடந்த 1951 செப்டம்பர் 6ம் தேதி, தினமலரின் முதல் பிரதியை வெளியிட்டவர் தமிழ் அறிஞர் வையாபுரிப் பிள்ளை. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தினமலர் தொடங்கப்பட்ட போதே ஒரு வாழ்த்து வெண்பா எழுதினார்.
'ஈசன் அருளால் எழுத்தாளர் ஒத்துழைப்பால்
வாசகரின் ஆசி வலிமையால் - பேசுபுகழ்
தென்னனந்தை பூத்த தினமலர் வாடாது
மன்னுலகில் வாழ்க வளர்ந்து.'
திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்ட பத்திரிகை என்பதால், தென்னனந்தை பூத்த 'தினமலர்' என எழுதுகிறார் கவிமணி. அப்போது வாழ்த்துச் செய்தி அனுப்பிய இன்னொரு பிரமுகர், ராஜாஜி.
வையாபுரிப் பிள்ளையாலும், கவிமணியாலும், ராஜாஜியாலும் வாழ்த்தப்பட்ட 'தினமலர்' மேலும் வளர்ந்து தழைக்கட்டும்.
அன்புடன்,
திருப்பூர் கிருஷ்ணன்,
ஆசிரியர், 'அமுதசுரபி'

