PUBLISHED ON : ஆக 23, 2026 12:29 AM

காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் வேணுகோபால்: ராகுலை பிரதமராக்க இந்தியாவே தயாராக இருக்கிறது; தமிழகமும் தயாராக இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் உள்ள காங்கிரசார் தயாராக இருக்கின்றனரா என்பது தான் கேள்வி. கட்சி நிர்வாகத்தில் பல மாற்றங்கள் கொண்டு வந்தும், சிலர் பணியாற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். வரும் காலங்களில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவிகள் வழங்கப்படும்.
டவுட் தனபாலு: காங்கிரசில், என்னைக்கு உழைச்சவருக்கு பதவி தந்திருக்கீங்க...? கோஷ்டி தலைவர்களுக்கு, 'கோட்டா' அடிப்படையில் பதவிகளை பங்கிட்டு கொடுத்து கொடுத்து தான், தமிழகத்தில் இன்னைக்கு உங்க கட்சி தேய்பிறையா போயிடுச்சு... தி.மு.க.,வுடன் பல வருஷங்களா கூட்டணியில் இருந்தப்ப, கட்சியை வளர்க்கும் கலையை அவங்களிடம் நீங்க கத்துக்கலையோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் அதிகாரிகள்: லஞ்ச புகார் மற்றும் வழக்கில் சிக்கிய நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் என கடந்த ஐந்து ஆண்டுகளில், 600 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 1,653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கையும், களவுமாக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 816 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற கணக்குப்படி பார்த்தா, எல்லாமே கடந்த தி.மு.க., ஆட்சியில் நடந்த சம்பவங்கள் என்பது தெளிவா தெரியுது... அதேநேரம், தி.மு.க., ஆட்சியில் ஆளுங்கட்சியினர் யாருமே லஞ்சம் வாங்கலையா அல்லது அவங்களை எல்லாம் நீங்க கண்டுக்கலையா என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: 'அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் இலவசமாக கார் வழங்கப்படும்; தனி உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியம், எரிபொருள் படி ஆகியவற்றுக்காக மாதம் 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்தார். மறுநாளே, எம்.எல்.ஏ.,க்களுக்கு உகந்த கார்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் இறங்கி விட்டனர். தலைமை செயலகத்திற்கு, 'மஹிந்திரா' நிறுவனத்தின் ஆறு வகை கார்கள் கொண்டு வரப்பட்டன; அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
டவுட் தனபாலு: மக்கள் பிரதிநிதிகளுக்கு கார்னு அறிவிச்ச மறுநாளே, அதுக்கான ஏற்பாடுகள்ல மின்னல் வேகத்துல இறங்கிட்டாங்களே... அதேபோல, தேர்தலுக்கு முன்னாடி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், இதே வேகத்தைக் காட்டினா, 'டவுட்' இல்லாம த.வெ.க., அரசை பாராட்டலாம்!
