PUBLISHED ON : ஆக 29, 2026 12:57 AM

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தமிழகத்தில் நேர்மையான பல அதிகாரிகளும் இருக்கின்றனர்; லட்சங்கள், கோடிகள் என வாங்கிய அதிகாரிகளும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட அதிகாரிகள், த.வெ.க., அரசை எப்படியாவது ஸ்தம்பிக்க செய்ய வேண்டும் என்ற முடிவோடு, 'பைல்'களை நகர்த்துவது இல்லை. அப்படிப்பட்ட அதிகாரிகளை விடுவித்து, புதிதாக வந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் நேர்மையானவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பொறுப்பு கொடுங்கள் என, முதல்வர் விஜயிடம் சொன்னேன்.
டவுட் தனபாலு: அது சரி... உங்க கோரிக்கை சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு பைல், எந்த அதிகாரியின் மேஜையிலோ தேங்கிடுச்சு போலிருக்கு... அதைத்தான் இப்படி நாசுக்கா குத்தி காட்டுறீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!
பத்திரிகை செய்தி: அரசியலில் இருந்து துறவறம் பூணுவதாக அறிவித்திருந்த பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், செப்., 1 முதல் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தன் இல்லத்தில், தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். 'தினமும் காலை 10:00 - 12:00 மணி; மாலை 4:30 - 6:00 மணி வரை பார்வையாளர்கள் சந்திக்கலாம்; அரசியல் தொடர்பாக எதுவும் பேசக்கூடாது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: அது சரி... ராமதாசை பார்த்து, பா.ம.க.,வில் ஏதாவது பதவி வாங்கலாம்னு நினைச்சு தான் தொண்டர்கள் வருவாங்க... 'அரசியல் பேசக்கூடாது'ன்னு, நிபந்தனை விதிச்சா எப்படி வருவாங்க...? ராமதாசுக்கு சும்மா இருந்து போரடிப்பதால், பொழுது போறதுக்காக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்காரோ என்ற, 'டவுட்' தான் வருது!
'மக்கள் ஒற்றுமை கழகம்' என்ற புதிய கட்சியை துவக்கியுள்ள, அதன் மாநில தலைவர் கமால் பாஷா: த.மு.மு.க., மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளேன். தற்போது, பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் இணைந்து, 'மக்கள் ஒற்றுமை கழகம்' கட்சியை தொடங்கி உள்ளோம். எங்கள் கட்சியில், 22 அணிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. எங்கள் கட்சி உதவியின்றி, தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாத நிலையை உருவாக்குவோம்; வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம்.
டவுட் தனபாலு: கட்சி துவங்குற எல்லாரும், ஆரம்பத்துல இப்படித்தான் சொல்றாங்க... ஆனா களத்துல இறங்கி, தங்களது பலம் அம்பலமானதும், ஒண்ணு, ரெண்டு, 'சீட்'களுக்காக பெரிய கட்சி கூட்டணியில ஐக்கியமாகிடுறாங்க... அதனால, உங்களது ஜம்பம் உள்ளாட்சி தேர்தலில் தெரிஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
