ஏற்காடில் 800 ஆண்டு கோவில் இடிப்பு: கல்வெட்டுகளை பாதுகாக்க கோரிக்கை
ஏற்காடில் 800 ஆண்டு கோவில் இடிப்பு: கல்வெட்டுகளை பாதுகாக்க கோரிக்கை
UPDATED : ஜூலை 05, 2026 07:24 AM
ADDED : ஜூலை 05, 2026 12:55 AM

ஏற்காடு: ஏற்காடில், 800 ஆண்டு பழமையான வாணீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டதால், அங்கிருந்த, 12, 13ம் நுாற்றாண்டு கால கல்வெட்டை பாதுகாக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காடு, மாரமங்கலம் ஊராட்சி கோவிலுாரில், வாணியாற்றின் கிழக்கு கரையில், 800 ஆண்டு பழமையான வாணீஸ் வரர் கோவில் இருந்தது. கோவில் கருவறை வெளியே நான்கு திசைகளிலும் கல்வெட்டும் இருந்தன.
சில ஆண்டுக்கு முன், சேலம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் பார்வையிட்டபோது, 12, 13ம் நுாற்றாண்டின் அரிய வகை கல்வெட்டு என, தெரிந்தது.
இந்நிலையில், கோவிலை இடித்து, புதிதாக கட்ட மக்கள் முயன்றனர். இதை தடுக்க கோரி, வரலாற்று ஆய்வு குழுவினர், சேலம் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர். ஆனாலும், சில மாதங்களுக்கு முன் கோவிலை இடித்துவிட்டனர். வரலாற்று ஆய்வு மைய குழு தலைவர் வெங்கடேசன் கூறியதாவது:
இங்கு நான்கு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. 12, 13ம் நுாற்றாண்டு கல்வெட்டு என்பதன் மூலம், 800 ஆண்டுக்கு முன், சேலம் என்ற பெயர் இருந்ததை அறியமுடிகிறது. அங்குள்ள விநாயகர் சிலை அருகே, புது கற்கால கருவிகள் உள்ளன. அதன்படி, ஏற்காடில், 6,000 ஆண்டுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததை அறிய முடிகிறது.
முக்கிய வரலாற்று தகவல் கொண்ட கல்வெட்டு இருந்த கோவிலை இடித்துள்ளனர். சிதைக்கப்பட்ட கல்வெட்டு, கற்கால கருவிகளை மீட்க வேண்டும். இல்லையெனில், கோவிலை புதிதாக கட்டும்போது, அந்த கல்வெட்டுகளை பதித்து, பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
