குறளால் குவியும் விருதுகள்; 11ம் வகுப்பு மலர்மிதா சாதனை
குறளால் குவியும் விருதுகள்; 11ம் வகுப்பு மலர்மிதா சாதனை
ADDED : ஆக 21, 2026 06:42 AM

கோவை: 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பார்கள். கோவை பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளி 11 ம் வகுப்பு மாணவி மலர்மிதா நல்ல உதாரணம். கதை, கவிதை, கட்டுரை, ஆய்வு, சொற்பொழிவு என இலக்கியத்தின் பல தளங்களில் முத்திரை பதித்து வருகிறார். ஐந்து கவிதை, ஆய்வுக் கட்டுரை தொகுப்பு நுால்களை வெளியிட்டுள்ளார். திருக்குறளில் உள்ள, 1330 குறள்களையும், 13 மணி நேரம் தொடர்ந்து மனப்பாடமாக சொல்லி அதற்கு விளக்க உரையும் தந்து, உலக சாதனை படைத்துள்ளார். 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டு விர்ச்சுவல் யுனிவர்சிட்டி' இவருக்கு 'திருக்குறள் துாதர்' என்ற பட்டமும், மதிப்புறு முனைவர் பட்டமும் வழங்கி உள்ளது. திருக்குறளை பல மணி நேரம் இசையோடு பாடி சாதனை படைத்து இருக்கிறார்.
பீனிக்ஸ் புக்ஸ் உலக சாதனை விருது, தமிழக அரசு திருக்குறள் விருது, பாரதி கண்ணம்மா விருது, இலக்கிய செம்மல் விருது, அப்துல்கலாம் விருது என, இவர் பெற்ற விருதுகளின் பட்டியல் நீள்கிறது. சமீபத்தில் உலகத் திருக்குறள் மையம் சார்பில் நடந்த மாநாட்டில் 'திருக்குறள் நினைவாற்றல் மாமணி' விருது வழங்கப்பட்டுள்ளது.
''6 வயதில் இருந்து திருக்குறளை படித்து வருகிறேன். ஆறாம் வகுப்பிலேயே, 1330 குறளையும் மனப்பாடம் செய்து, 13 மணி நேரம் குறளை சொல்லி, பொருள் கூறி உலக சாதனை செய்தேன். திருக்குறளை தேசிய நுாலாகவும், உலக நுாலாகவும் அறிவிக்க வேண்டும் என்பது தான் என் ஆசை” என்கிறார் மலர்மிதா.
