தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ஆட்சியாளர்களே 'மட்டை'யாகிட்டாங்களோ?

ஆட்சியாளர்களே 'மட்டை'யாகிட்டாங்களோ?

ஆட்சியாளர்களே 'மட்டை'யாகிட்டாங்களோ?


PUBLISHED ON : ஏப் 26, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரேவதி பாலு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கிற்கு; எங்கள் ஆட்சியில் இளம் விதவைகள் உருவாக விட மாட்டோம்' என்ற சூளுரைகள், காற்றில் பறந்து போச்சு. இப்போது அதிபயங்கரமான ஒன்று, தமிழ்நாட்டை உலுக்கி எடுக்கிறது. அது... போதைப்பொருள்!

 கஞ்சா போதையில் வாலிபர் நடு வீதியில் கலாட்டா. தன்னைத் தடுத்த போக்குவரத்து காவல்துறையினரை அரிவாளால் வெட்ட முயன்றார்.

 ஆறு மாதங்களில், 199 கஞ்சா வழக்குகள் ஆவடியில் மட்டுமே; கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 438 கிலோ கஞ்சா, 3,815 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

 குன்றத்துார் அருகே திருவள்ளூரைச் சேர்ந்த இருவரின் உடமைகளிலிருந்து 4.50 லட்சம் மதிப்புள்ள 45 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்து போலீசார் அவர்களைப் பிடித்தனர்

 ரயிலில் போதைப்பொருட்களை கடத்தி வந்த தம்பதியை காவல்துறையினர் பிடித்து விசாரணை!

 அரசு பள்ளி அருகே ஒரு பெட்டிக்கடையில் மற்றும் கல்லுாரி மாணவர்கள் விடுதி வாசலில் போதைப் பொருட்கள் விற்றவர்கள் கைது.

- இந்த மாதிரி செய்திகள் தினமும் பத்திரிகைகளில் வெளியாகத் துவங்கி விட்டன.

பல ஆண்டுகளாக அமோகமாக போதை சப்ளை செய்து கொண்டிருந்த ஒரு கும்பலை, போலீசார் இப்போது தான் கண்டறிந்துள்ளனர். இதில் முக்கிய புள்ளி, தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகியாக மிகுந்த செல்வாக்குடன் வலம் வந்தவர்.

மக்களின் நல்வாழ்விற்கு பொறுப்பேற்க வேண்டிய அரசு, இவரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து மட்டுமே நீக்கி, வேறு எதைப் பற்றியும் பேசாமல் மவுனம் சாதிப்பது, மிக மிக அதிர்ச்சியாக இருக்கிறது.

சமீபத்திய செய்திகளாக...

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லுாரிலிருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில், பாலக்கரை பகுதியில் ஆறு இளைஞர்கள் கஞ்சா போதையில் சாலையின் நடுவே இரு சக்கர வாகனத்தின் அருகே அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது, பேருந்து ஓட்டுனர் அவர்களிடம் சாலையின் நடுவே இருந்த இரு சக்கர வாகனத்தை எடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கோபமுற்ற அந்த இளைஞர்கள் பேருந்தில் ஏறி சராமாரியாக ஓட்டுனரை அடித்ததாகவும், பலத்த காயமுற்ற அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த செய்தியாளர்கள் மீதும் போதையில் உள்ள இளைஞர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், செய்தியாளர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இதே போன்று, சென்னை கண்ணகி நகரில், ஒரு கஞ்சா வணிகரை கைது செய்ய சென்ற காவலர்களை, கஞ்சா வியாபாரியும், அவரது நண்பர்களும் சேர்ந்து தாக்கியதில், இரண்டு காவலர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளைய தலைமுறையினர் போதையால் மதியிழந்து போகும் நிலையைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. ஒரு வேளை... ஆட்சியாளர்களே,போதைக்கு அடிமையாகி, 'மட்டை'யாகி விட்டனரோ?



யாருக்கு தேவை விழிப்புணர்வு?


எஸ்.ஆர்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொக்கும், நரியும் கதை தெரியுமா? தெரியாத இளைய தலைமுறையினருக்காக ஒரு இடைச்செருகல்...

இரண்டு நண்பர்கள். நரி ஒரு நாள், கொக்கை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தது; கொக்கும் ஆவலோடு சென்றது.

அங்கே நரி, ஒரு தட்டில் பாயசத்தை ஊற்றி வைத்து உண்ணும்படி சொன்னதாம். கொக்கால்தட்டிலுள்ள பாயசத்தை உண்ண முடியுமா? உண்ண முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பியது!

சில நாட்கள் கழித்து, நரியை, கொக்கு தன் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தது. நரியும் சென்றது. கொக்கு, தன் வீட்டில், ஒரு குடுவையில் பாயசத்தை நிரப்பி வைத்து, நரியிடம் உண்ணுமாறு சொன்னது. நரி, குடுவையையும், பாயசத்தையும் மாறி மாறி பார்த்து, உண்ண முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பியது.

இப்போது பிரச்னைக்கு வருவோமா...

ஒரு வழியாக தமிழ்நாட்டில், லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. நன்றாக கவனியுங்கள்... ஒரு வழியாக!

இந்த ஓட்டுப்பதிவு நடக்கும் நாள் வரை, 100 சதவீத ஓட்டுப்பதிவு என்றும், வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென்றும், அவர்களுக்கு அரசு வேலை வழங்கக் கூடாது என்றும், அவர்களது குடும்ப அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், அவர்களை நாடு கடத்த வேண்டும் என்ற தண்டனையை தவிர, மற்ற எல்லா ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், அவரவர்க்கு தோன்றிய வகையில் அறிவுறுத்தினர்.

தேர்தல் ஆணையமும், மாநில அரசும், தேர்தல் விழிப்புணர்வு என்ற சில நாடகங்களை நடத்தி வேடிக்கை காட்டியது.

ஆனால், வாக்காளர்கள் அதிபுத்திசாலிகள். ஐடியா கொடுத்தவர்களின் மிரட்டல் களுக்கோ, தேர்தல் ஆணையத்தின் மற்றும் மாநில அரசின் விழிப்புணர்வு வேடிக்கைகளுக்கோ, கிஞ்சிற்றும் அஞ்சாமல், மசியாமல் உறுதியாக 'மவுனப்புரட்சி' நடத்தி, தேர்தல் ஆணையத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் 'விழிப்புணர்வு பாடம்' நடத்தி இருக்கின்றனர்.

இரண்டுக்கும், இந்த விழிப்புணர்வு புத்தியில் உறைக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

கல்வி தகுதியற்ற, குற்றப்பின்னணி கொண்ட, குற்ற வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் நபர்களை, ஏற்கெனவே வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்ற குற்றவாளிகளை, கருப்புப்பண முதலைகளை, ஜாதியை பார்த்து நிறுத்தும் வேட்பா ளர்களை, சமூகசேவை செய்யும் அக்கறை கிஞ்சிற்றும் அற்ற தற்குறிகளை, கேடிகளை, கொலைகாரர்களை, கொள்ளைக்காரர்களை வேட்பாளர்களாக நிறுத்தி, அந்த சமூக விரோதிகளுக்குத்தான் நீங்கள் ஓட்டளித்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்தித்தால். கட்டாயப்படுத்தினால் எப்படி ஐயா 100 சதவீத வாக்குகள் பதிவாகும்?

பதிவாகாத 40 சதவீத ஓட்டுகள், மேலும் மேலும் கூடுமே தவிர குறையாது.

இந்த தில்லாலங்கடிக்கு தேர்தல் ஆணையம், மத்திய- - மாநில அரசுகள், நீதிமன்றங்கள் அனைத்தும் ஒன்றாக கூடி, ஆலவட்டம் வீசிக் கொண்டிருப்பது தான் ஜனநாயக கொடுமை. கொடுமை மட்டுமல்ல; ஜனநாயகப் படுகொலை.

ஒரு நபரை விருந்துக்கு வரவழைத்து, அமரவைத்து, இலையில் அவருக்கு பிடிக்காத வஸ்துக்களை பரிமாறி, 'சாப்பிடுங்க... சாப்பிடுங்க...' என்றால், எப்படி ஐயா சாப்பிடுவார்? எழுந்து தான் போவார்!

அந்த 40 சதவீத வாக்காளர்கள், ஓட்டுப்பதிவு நாளன்று, ஓட்டளிக்காமல் தேர்தலை புறக்கணிப்பதற்கு, வேட்பாளர்களை, வாக்காளர்கள் மீது திணிப்பதுதான் முக்கிய காரணம்; முதல் காரணம்; முழு காரணம்!

ஆனால், இப்போதுள்ள இந்த வேட்பாளரை, வாக்காளர்கள் மீது திணிக்கும் பழக்கத்தை, அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளாது. தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளாது. நீதிமன்றங்கங்களும் ஓரமாக நின்று வேடிக்கை தான் பார்க்குமேயன்றி, நடவடிக்கைகள் எதுவும் இருக்காது.

ஆக... விழிப்புணர்வு தேவைப்படுவது அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும், அரசுகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் தானே தவிர, வாக்காளர்களுக்கு அல்ல!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us