தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ உண்மையை உரக்க சொன்னார்!

உண்மையை உரக்க சொன்னார்!

உண்மையை உரக்க சொன்னார்!


PUBLISHED ON : செப் 08, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.காந்தி, பீஹாரிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?' என்று நம் செந்தமிழில் ஒரு சொலவடை உண்டு.

'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை!' என்கிறார், அய்யன் வள்ளுவப் பெருந்தகை.

ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வமானது, கல்வியே. அதைத்தவிர மற்றைய செல்வங்களெல்லாம் செல்வங்களாக மாட்டா என்பது அக்குறளின் பொருள்.

அந்த கல்வியை, ஒருவன் தன் சிறு வயதிலேயே கற்று தேர்ந்து விட வேண்டும். வயது முதிர்ந்த பின் கற்கலாம் என்று ஒத்தி வைத்தாலோ, தள்ளிப் போட்டாலோ அக்கல்வியை கற்று தேற இயலாது; மூளையில் ஏறாது. அதைத்தான், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற சொலவடை உணர்த்துகிறது.

ஆனால், அந்த சொலவடையையே புறமுதுகிட்டு ஓடச் செய்துள்ளவர், நம் கவர்னர் ரவி.

அவர் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இங்கு பதவியேற்கும் போது, தமிழில் பேசுவதற்கு சிறிது தட்டுத் தடுமாறினாலும்,மூன்றாண்டுகளில், மேடைகளில், கழக பேச்சாளர்களுக்கு ஈடு கொடுத்து பேசும் வகையில் தமிழ் மொழியை கற்று தேர்ந்து விட்டார். கவர்னர் ரவி அவர்கள்.

அது மட்டுமின்றி, தன் மனதிலுள்ள கருத்துகளை துணிவோடு, பொது வெளியில் கூறும் துணிச்சலும், தைரியமும், நேர்மையும், நாணயமும் நிறைந்தவராக உள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற, 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில், 300 ஆசிரியர்களுடன், கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்த கலந்துரையாடலில், 'பொதுவாக, பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் வாயிலாக, மேல்நிலைப் பள்ளிகளில், தரம் வாய்ந்த ஆய்வகங்கள் கட்டமைக்க, மத்திய அரசு நிதி வழங்குகிறது. இதைப் பெற்ற மாநிலங்கள், மாணவர்களின் தரத்தை மேம்படுத்தி உள்ளன.

'தமிழக கிராமங்களிலும் கல்வியை வளர்க்க, முன்னாள் முதல்வர் காமராஜர் அரசு பள்ளிகளை அதிகப்படுத்தினார். தற்போது கல்வியின் இன்ஜின் எனக்கூறும்தமிழக அரசு பள்ளிகளில், எட்டு, ஒன்பதாம்வகுப்பு படிக்கும் மாணவர்களில், 75 சதவீதம் பேருக்கு, மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்க, இரண்டிலக்க எண்களை அறிய முடியவில்லை.

'இதை மேம்படுத்தாவிட்டால், கல்வியின்தரத்தை நாம் இழந்து விடுவோம்' என, உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார்.

'எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்' என்றும், அரசு கட்டடங்களின் உச்சியில், 'தமிழ் வாழ்க' என்று நியான் விளக்கு போர்டுகளும் வைத்து விட்டால், தமிழ் ஆட்டோமேடிக்காக வளர்ந்து விடும் என்று கருதும் ஆட்சியாளர்களுக்கு, கவர்னர் ரவியின்கருத்து, எட்டிக்காயாக கசந்திருக்கும் என்பதோடு, அவர்களது தகுதி மற்றும் திறமைகளை வெளிச்சம் போட்டுகாட்டுவதாகவும் அமைந்திருக்கும்.

தமிழை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டிருக்கும், கழகங்கள் அச்சிடும் போஸ்டர்களிலும், சுவரொட்டி மற்றும்சுவர் விளம்பரங்களிலும் தமிழைத்தவறாக எழுதுவதிலிருந்தே, தமிழ் மொழி கழகங்களிடம் படும் பாட்டை புரிந்து கொள்ளலாம்.



நல்லாசி ரியர்கள் செய்யணும்!


வி.எஸ்.ராமு, செம்பட்டி,திண்டுக்கல் மாவட்டத்தில்இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ------------------------------மாநில அரசு ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள்உள்ளிட்டோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கிறது.

விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியலை நாளிதழ்களில் பார்க்க முடிந்த அதே நாளன்று, மறுபக்கத்தில், மாணவர்களுக்கான உதவித்தொகையை கையாடல் செய்ததாக,பழனியில் பள்ளி ஆசிரியை கைது என்ற செய்தி, அடுத்த படியாக திருச்சியில் பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக டாக்டராக உள்ள தன் மகனுக்கு உடந்தையாக இருந்ததால், பள்ளியின் தலைமை ஆசிரியை கைது என்ற செய்தியும் நெருடலை ஏற்படுத்தியது.

ஒரு சில ஆசிரியர்களை தவிர, பெரும்பாலான ஆசிரியர்கள் அமைச்சர்,எம்.பி, - எம்.எல்.ஏ., அதிகாரிகள் சிபாரிசு, குறுக்கு வழி, லஞ்சம் கொடுத்து இவ்விருதை கைப்பற்றி விடுகின்றனர்.

கற்பித்தல் பணி மட்டுமில்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளில் செய்த சாதனைகள், சேவைகள், படைப்புகள், சொந்த பணம் மாணவர்களுக்காக செலவிட்ட விபரம், குற்ற வழக்குகள், பாலியல்புகார் குறித்து பார்க்கப்படுகிறது.

விருது பெற வேண்டும் என்பதற்காக, சில ஆண்டுகள்சிலவற்றை மட்டும் செய்து ஆவணப்படுத்தி பலரும் விருதை வாங்கி விடுகின்றனர்.

தகுதி உள்ள ஆசிரியர்களில் சிலர் விருதுக்கு விண்ணப்பிப்பது இல்லை. தலைமை ஆசிரியர்கள், அதிகாரிகள் இப்படியானவர்களை தேடி பரிந்துரை செய்ய வேண்டும்.

சரி எப்படியோ விருதுபெற்றாகிவிட்டது இனி வரும் காலங் களில் மாணவர்கள், பெற்றோர்,சமூக நலன், விழிப்புணர்வு,சுற்றுச்சூழல், ஆய்வுகட்டுரை, கண்டுபிடிப்புகள் சார்ந்து விருது பெற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் தான் விருதுக்கு பெருமை.

விருது வாங்கிய பின் பெரும்பாலானவர்கள், 'பள்ளிக்கு சென்றோம் பாடம் நடத்தினோம்' என்ற எல்லைக்குள் இருக்கும் இடம் தெரியாமல் சுருங்கி விடுகின்றனர்.

விருது பெற்ற ஆசிரியர்கள்சிறகடித்து பறக்க வேண்டும்.அவர்கள் சேவை தொடர வேண்டும். மாதந்தோறும் இவர்கள் ஏதாவது செய்த படியே இருக்க வேண்டும்.இதைத்தான் மாணவர்களும், பெற்றோரும், சமூகமும் எதிர்பார்க்கிறது.

நல்லாசிரியர்கள் செய்வரா?



மக் க ளின் ஆராய்ச்சி மணி 'தினமலர் !'


கே.மணிவண்ணன்,சூலுார், கோவை மாவட்டத்தில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த, 73 ஆண்டுகளை, 'தினமலர்' நாளிதழ் கடந்து வந்த பாதை கரடுமுரடானது.

கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக, தினமலர் நாளிதழ் என்ற காற்றை, காலை எழுந்தவுடன் சுவாசிக்கிறேன். சமூக பணியில் அதன் பங்கு அளப்பரியது.

மரம் நட ஊக்குவித்தல், நீர்நிலை மீட்டெடுப்பு, கனிம வளம் போன்ற பணிகளில், தன்னை தன்னலமின்றி ஈடுபடுத்திக் கொண்டது, மாணவர்களின்கல்வி மேம்பாடு, உயர் கல்விக்கு வழிகாட்டுதல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளை நடுநிலைஉடன் விமர்சிப்பது, நற்செயலுக்கு பாராட்டுவது,ஆளுங்கட்சி விளம்பரம் கொடுத்தாலும், கொடுக்கா விட்டாலும், குற்றங்களை துணிந்து சுட்டிக்காட்டுவது தான்இதன் தனி சிறப்பு.

சிறுவர்மலர், வாரமலர், ஆன்மிக மலர் போன்ற வாரஇதழ்கள், படிக்க படிக்க தெவிட்டாத தெள்ளமுது.

விவசாயம், மண்வளம் சார்ந்த கட்டுரைகள் மற்றும் சிந்தனை களம் ஆகியவை, தினமலர் நாளிதழின் மணி மகுடங்கள். 'இது உங்கள் இடம்' பகுதிக்கு என்னை கடிதம் எழுத துாண்டிய தினமலர் நாளிதழுக்கு நன்றி.

சோழர்கள் ஆட்சியில்,குறைகளை கூற மக்கள் ஆராய்ச்சி மணி அடித்தனர்;மக்களாட்சியில், மக்கள் குறைகளை களைய, அந்த மணியை தினமலர்நாளிதழ் அடிக்கிறது.

மக்களின் ஆராய்ச்சி மணி 'தினமலர்!'



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us