PUBLISHED ON : ஜூலை 15, 2026 12:30 AM

சி.ஷிவானி, செங்கோட்டை, தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த இரு பொறியாளர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒருமுறை இந்திய பொறியாளர் தன் நண்பரை காண இங்கிலாந்து நாட்டிலுள்ள அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்.
இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, துாரத்தில் தெரிந்த பாலத்தை காட்டி, 'அதோ அங்கு தெரிகிறதே... அந்த பாலத்தையும், அதற்கு அருகில் உள்ள பிரமாண்ட கட்டடத்தையும் நான் தான் கட்டினேன். அதில் கிடைத்த லாபத்தில் தான் இந்த சிறிய வீட்டை கட்டினேன்...' என்றார்.
'இது என்ன பிரமாதம்... என் வீட்டை வந்து பாருங்கள்... அசந்து விடுவீர்கள்...' என்றார், இந்திய பொறியாளர்.
அடுத்தாண்டு இங்கிலாந்து பொறியாளர், நண்பரை காண இந்தியாவுக்கு வந்தார். நண்பரின் பிரமாண்டமான மாளிகையை கண்டு வியந்து போனவர், 'அடேங்கப்பா... எவ்வளவு பெரிய மாளிகை... எப்படி கட்டினீர்கள்?' என்று கேட்டார்.
அதற்கு இந்திய பொறியாளர், துாரத்தில் தெரிந்த நதியை காட்டி, 'அந்த நதியின் குறுக்கே ஒரு பாலம் கட்டியதில் கிடைத்த லாபத்தில் தான், இந்த மாளிகையை கட்டினேன்...' என்றார். 'அங்கு எந்த பாலத்தையும் காணவில்லையே...' என்றார் இங்கிலாந்துக்காரர்.
அதற்கு, 'பாலம் கட்டினால் தானே இருக்கும்' என்றாராம் இந்திய பொறியாளர்.
காங்., ஆட்சி காலத்தில், காமன்வெல்த், '2ஜி' மற்றும் நிலக்கரி ஊழல் என பல்வேறு துறைகளின் ஊழல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்டர்நெட்டில் உலாவிய நையாண்டி கதை இது!
இக்கதையைப் போல், கடந்த தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த வேலு, சாலையே போடாமல், 3.5 கோடி ரூபாயை சுருட்டியதன் வாயி லாக இக்கதையை நிஜமாக்கி விட்டார்.
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக இருந்த போது, அடிக்கடி, 'திராவிட மாடல்' என்பார். திராவிட மாடல் என்றால் என்ன என்பது அப்போது புரியவில்லை; இப்போது தெளிவாக புரிந்து விட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், கிட்டத்தட்ட ஆறு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தின் கடன் சுமை கூடியுள்ளது. ஆனால், அதற்கேற்ற வகையில் சொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு பிரமாண்ட திட்டத்தையும் நிறைவேற்றியதாக தெரியவில்லை.
அமைச்சர் வேலு பாணியில் தான், தி.மு.க., அமைச்சர்கள் பலரும் பணத்தை சுரண்டியிருப்பர் போலும்!
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் வேலுவின் ஊழல்! lll
----
பாடத் திட்டங்களில் வெத்துவேட்டுகளை 'துாக்குங்கள்!'
முனைவர் செ.அ.ராகுல் கோல்டன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: ஒரு நாட்டின் வளர்ச்சி, அதன் இயற்கை வளங்களால் மட்டுமல்ல, அந்த நாட்டிற்கு வழிகாட்டும் தலைவர்களின் நிர்வாக திறனாலேயே தீர்மானிக்கப்படுகிறது.
அதேபோன்று, ஒரு சிறந்த தலைவருக்கு நேர்மை, தொலைநோக்குப் பார்வை, மக்களின் தேவைகளை உணரும் மனப்பான்மை, எளிமை மற்றும் துணிச்சல் ஆகிய பண்புகள் அவசியம்.
இந்த அனைத்து பண்புகளையும் தன் வாழ்க்கையில் ஒருங்கே கொண்டிருந்தவர் காமராஜர். அவர் எடுத்த ஒவ்வொரு முடிவிலும், மக்கள் நலனுக்கே முன்னுரிமை அளித்தார். அதுவே அவரை காலத்தால் அழிக்க முடியாத தலைவராக மாற்றியது.
காமராஜரின் தலைமைத்துவத்தின் மிகப்பெரிய சிறப்பு, பிரச்னைகள் குறித்து பேசாமல், அவற்றுக்குத் தீர்வு காண்பதில் இருந்தது. குடிநீர், சாலை, கல்வி, தொழில் வளர்ச்சி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் க வனம் செலுத்தினார்.
ஒரு தலைவர், மக்கள் மத்தியில் இருப்பது தேர்தல் நேரத்தில் மட்டும் அல்ல; அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒவ்வொரு தருணத்திலும் இருக்க வேண்டும் என்பதை அவர் நிரூபித்தார்.
இன்றைய உலகம் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியிருந்தாலும், ஊழல், நிர்வாகத் தாமதம், சமூக ஏற்றத்தாழ்வுகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சவால்கள் போன்ற பல பிரச்னைகள் இன்னும் நிலவுகின்றன.
இவற்றைச் சமாளிக்க திறமையான நிர்வாகம் மட்டுமல்ல, நம்பகமான தலைமைத்துவமும் அவசியமாகிறது.
காமராஜரைப் போன்ற நேர்மையான, எளிமையான, தொலை நோக்குப் பார்வையுடைய தலைவர்கள் உருவாக வேண்டும். அதற்கான அடித்தளம் இன்றைய மாணவர்களிடம்தான் உள்ளது.
எனவே, காமராஜரின் வாழ்க்கையைப் படிப்பது ஒரு தலைமைத்துவப் பயிற்சியாக இருக்க வேண்டும். அவரது சிந்தனைகள், புத்தகங்களில் மட்டுமல்ல, நம் செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கும்போதுதான் அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை முழுமை பெறும்.
தமிழகக் கல்வித் திட்டத்தில், வெத்துவேட்டு பாடங்களை நீக்கி, காமராஜர் உட்பட, எந்தெந்த தலைவர்கள் சிறந்த திட்டங்களைத் தீட்டி இருந்தாலும், அத்திட்டம் எதனால் தீட்டப்பட்டது என்பதையும், அதை மேற்கொள்ள ஏற்பட்ட சிரமங்களையும், அத்திட்டம் தற்போது எவ்விதம் சிறந்ததாக இருக்கிறது என்பதையும் விளக்கி, அதை உருவாக்கிய தலைவர் குறித்தும் எழுதினால், மாணவர்கள் சிறந்த முறையில் உத்வேகம் பெற உறுதுணையாக இருக்கும்.
---
அரசு யோசிக்குமா?
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நிலம் விற்போர், வாங்குவோர் என இரு தரப்பினரும் சொத்து பதிவிற்காக பல்வேறு செலவினங்களால் திக்குமுக்காடும் நிலையே இன்று உள்ளது. காரணம், மார்க்கெட் மதிப்பும், வழிகாட்டி மதிப்பும் ஏட்டிக்கு போட்டியாக உள்ளன.
நடப்பு வழிகாட்டி மதிப்பின்படி, 11 சதவீதம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டி யுள்ளது; கூடவே, மற்ற செலவுகளும் உள்ளன.
மேலும், கிராம தரிசு நிலங்களுக்கு கூட, விளைநிலங்களுக்கு இணையாக கூடுதல் வழிகாட்டி மதிப்பும், பதிவு கட்டணமும் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், சொந்த ஊரில் விளைநிலம் கிரயம் செய்யும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
புறநகர் பகுதிகளிலோ சந்தை நிலவரத்தை விட வழிகாட்டி மதிப்பு குறைவாக உள்ளது. நேர்மையான அதிகாரிகள், நில மதிப்பீட்டு இன்ஜினியர்கள், மூத்த பத்திர பதிவு எழுத்தர்கள் என மூவர் குழு அமைத்து, நிலத்தின் நிஜமான நடப்பு சந்தை மதிப்பை, அரசு நிர்ணயிக்க வேண்டும்.
இதனால், கிரயம் செய்வோருக்கு கூடுதல் செலவு இருக்காது; அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படாது. நிலத்தின் உண்மையான மதிப்பின்படி நிலம் கிரயம் செய்யப்படும். நேர்மையாக வரி செலுத்துவோர் அதிகரிப்பர். சார் - பதிவாளரும் திக்குமுக்காட வேண்டியது இல்லை!
அரசு யோசிக்குமா?
