PUBLISHED ON : ஜூலை 27, 2026 12:49 AM

என்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'பா.ஜ., தலைமையிலான கூட்டணியில், தி.மு.க., இடம் பெறாது; அவற்றின் கொள்கைகள் வெவ்வேறானவை என்பதால், அவை ஒரு போதும் ஒன்றிணைய முடியாது. 'இண்டி' கூட்டணி கூட்டத்தில், தி.மு.க., பங்கேற்காவிட்டாலும், நாங்கள் தொடர்ந்து, தி.மு.க., -- எம்.பி.,க்களுடன் தொடர்பில் தான் இருக்கிறோம்' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலர் ஜெயராம் ரமேஷ்.
எம்.ஜி.ஆர்., நடித்த, நம்நாடு திரைப்படத்தில், நகரசபை கமிஷனராக நடித்தவர், நகரசபை தலைவராக நடித்த எம்.ஜி.ஆரைப் பார்த்து, 'தொரை... உனக்கு சட்டமும் தெரியலை, ஒரு மண்ணும் தெரியலை' என்பார்.
அதுபோல், ஜெயராம் ரமேஷுக்கு, தி.மு.க.,வின் கொள்கையும் தெரியவில்லை; அதன் கோட்பாட்டையும் அறியவில்லை.
தி.மு.க.,வை பொறுத்த வரை கொள்கை என்பது இடுப்பு வேட்டி; கூட்டணி என்பது தோளில் அணியும் துண்டு!
தோளில் துண்டு இல்லாமல் இருக்கலாம்; இடுப்பில் வேட்டி இல்லாமல் நடமாட முடியுமா?
கடந்த 1999 - 2004 வரையிலான வாஜ்பாய் அமைச்சரவையில், தி.மு.க.,வை சேர்ந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு மற்றும் கண்ணப்பன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக கோலோச்சி உள்ளனர். 2003ல் முரசொலி மாறன் மறைந்ததும், அந்த இடத்தில் ஆ.ராஜா வந்து அமர்ந்து கொண்டார்.
முரசொலி மாறன் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதும் கூட, கடந்த தி.மு.க., ஆட்சியில், புழல் சிறையில் இருந்தவாறே, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி எப்படி நீடித்துக் கொண்டிருந்தாரோ, அதுபோல் இலாகா இல்லாத அமைச்சராக முரசொலி மாறன் மத்திய அமைச்சரவையில் நீடித்துக் கொண்டிருந்தார்.
ஆகவே, தி.மு.க.,வை பொறுத்தவரை, அதிகாரத்தை கைப்பற்றுவதே அதன் கொள்கை; அதற்கும், கூட்டணிக்கும் சம்பந்தம் இல்லை.
அதனால், தாங்கள் உதறி தள்ளியபின்பும், தி.மு.க., தங்களுக்கு தோள் கொடுக்கும் என்று ஜெயராம் ரமேஷ் கனவு கண்டால், அது பகல் கனவே!
தரத்தை உறுதி செய்ய வேண்டும்!
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கோடை காலம் வந்து விட்டால் போதும்... தெருக்கள் தோறும் ஆங்காங்கே தள்ளு வண்டிகளில் பழச்சாறு விற்பனை கடைகள் தோன்றி விடுகின்றன.
பெரும்பாலான தள்ளுவண்டி கடைகளில் அழுகும் நிலையில் உள்ள பழங்களையும், கெட்டுப்போன பழங்களையும் மலிவு விலையில் வாங்கி, சுகாதாரமற்ற தண்ணீர், ஐஸ் கட்டிகள், சர்க்கரை, பால், மசாலா போன்ற தரமற்ற மூலப்பொருட்களை சேர்த்து, பழச்சாறு தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
ஒரு தள்ளு வண்டிக்காரர், அழுகிப் போன ஆப்பிள் பழங்களை உபயோகப்படுத்தி, பழச்சாறு தயாரித்ததை என் கண்ணால் கண்டேன்.
விலை மலிவாக இருப்பதால், மக்களும் இக்கடைகளில் வாங்கி பருகுகின்றனர்.
கெட்டுப்போன பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் இப்பழச்சாறுகளைப் பருகுவதால், வயிற்றுப்போக்கு, வாந்தி, அஜீரணம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, உணவு மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர்கள், இதுபோன்ற பழச்சாறு விற்பனை கடைகளுக்கு அடிக்கடி சென்று, அங்கு விற்கப்படும் பழங்கள் மற்றும் மூலப்பொருட்களை ஆய்வு செய்து, அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும்!
பிரிவினை சக்திகளுக்கு இளைஞர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
எஸ்.ஸ்ரீனிவாசன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நம் நாட்டில் இளைஞர்களின் சக்தி தேசத்தின் உயர்விற்கு எந்த அளவு பயன்படுத்தப்படுகிறதோ, அதே அளவு சில தேசவிரோத சக்திகளால் திசைதிருப்பப்பட்டு, வீணடிக்கப்படுகிறது.
ஒருபுறம், அமெரிக்காவின் புகழ்பெற்ற, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு இணையாக, நம் நாட்டின் 'ஸ்கைரூட்' என்ற, 'ஸ்டார்ட் --அப்' நிறுவனம், முற்றிலும் சுயமாக தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பி, வரலாற்று சாதனை படைத்துள்ளது.
உலகையே வியந்து பார்க்க வைத்த, 28 வயதிற்குட்பட்ட இந்த இளைஞர்களின் விண்வெளிச் சாதனை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பதோடு, இன்றைய இளைஞர்கள் எவ்வளவு ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்து செயலாற்றுகின்றனர் என்பதற்கு, மிகச்சிறந்த உதாரணமாகவும் உள்ளது.
அதேநேரம், இதற்கு நேர்மாறாக, நாட்டின் வீழ்ச்சி மற்றும் சட்டம்- - ஒழுங்கை சீர்குலைப்பதற்காக இளைஞர்களின் அறிவையும், நேரத்தையும் திசைதிருப்பும் அவலமும் தற்போது அரங்கேறி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன், இளைஞர்கள் மற்றும் கரப்பான் பூச்சி குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பேசிய ஒரு வார்த்தையை கையில் எடுத்துக் கொண்டு, இந்தியாவில் எப்படியாவது கலவரத்தை துாண்டி, ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, 'கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி' என்று ஒரு சமூக வலைதள அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பு தற்போது, 'நீட்' வினாத்தாள் கசிவு என்ற பெயரில், இந்திய இறையாண்மைக்கு எதிராக இளைஞர்களை துாண்டி வருகிறது.
சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக் என்பவர், இந்த அமைப்புடன் சேர்ந்து, பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தவர், தற்போது மத்திய அரசுக்கு எதிராகவும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும், உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து, நாட்டில் ஒரு பெரும் கலவரத்தை ஏற்படுத்த முயன்று வருகிறார்.
இப்போராட்டங்களின் உண்மையான நோக்கம் இளைஞர்களின் நலன் சார்ந்தது அல்ல; அந்நிய நாட்டு துாண்டுதலின் பேரில் இந்தியாவின் நற்பெயரையும், அமைதியையும் சீர்குலைப்பதற்காக நடத்தப்படும் திட்டமிடப்பட்ட சதிவலை!
தேசத்தின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் இத்தகைய போராட்டங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
அதேநேரம், இன்றைய இளைஞர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தருணம் இது!
வெளிநாட்டு துாண்டுதல்களையும், மறைமுக தாக்குதல்களையும் இனம் கண்டு, சுயசிந்தனையோடு இவற்றுக்கு இளைஞர்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!
