PUBLISHED ON : ஜன 25, 2024 12:00 AM
எஸ். மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராமர் கோவில் திறப்பு நாளில், கோவில்களில் அன்னதானம் வழங்கவும், கோவில் திறப்பு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்யவும் தடை விதித்து, தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது; இது, நுாற்றுக்கு நுாறு உண்மை.
ஆனால், 'அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட, 'தினமலர்' நாளிதழ் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாதாரணமாக காவல் நிலையங்களில், புகார் கொடுக்க வருவோர் மீதே வழக்கு பதிந்து, குற்றவாளியாக்கும் முயற்சி நடைபெறும். அந்த வேலையை, தற்போது தமிழக அரசே மேற்கொண்டு அச்சுறுத்துகிறது.
குரங்குகளிடம் ஒரு பழக்கம் உண்டு... குரங்கின் முன் சூடான சாதத்தை தட்டில் வைத்தால், தாய் குரங்கு உடனே கை வைக்காமல், மடியில் இருக்கும் குட்டியின் கையை நைஸாக எடுத்து, சூடான சோற்றின் உள்ளே திணிக்கும்.
சூடு தாங்காமல், குரங்கு குட்டி கத்தும் போது, 'ஆஹா... சோறு சூடாக உள்ளது. அதில் நாம் கை வைத்து சூடு பட்டு விடக்கூடாது' என்று தீர்மானிக்கும்.
அதுபோல, அயோத்தியில் நடந்த ஸ்ரீராமர் பிராண பிரதிஷ்டைக்கு, தமிழக கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் நேரடியாக அரசே அனுமதி மறுத்தால், ஹிந்துக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
அதனால், வாய்மொழியாக உத்தரவிட்டு அது, 'வொர்க் அவுட்' ஆனால் ஹிந்துக்கள் அடிபணிந்து பயந்து நடுங்கி விட்டனர் என்று, காலரை துாக்கி விட்டு கொள்ளலாம் என்ற கோணத்தில், ஒரு வாய்மொழி தடை உத்தரவை பிறப்பித்து, நுால் விட்டுப் பார்த்து இருக்கிறது.
ஆனால் அதை, 'தினமலர்' நாளிதழ் செய்தியாக்கி, மக்களும் கொதித்து எழுந்ததால், தற்போது வழக்கு மிரட்டல் விடுத்துள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தமிழகம் முழுதும் நேரடி ஒளிபரப்பு செய்யவும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தவும், அன்னதானம் வழங்கவும் அனுமதி கோரி, ஹிந்து அமைப்புகள் கொடுத்த கடிதங்களுக்கு, பல்வேறு காரணங்களை கூறி அனுமதி மறுத்த போலீஸ் அதிகாரிகள், தமிழகத்தில் தானே பணிபுரிகின்றனர். அவர்கள் எழுத்துபூர்வமாக அளித்த மறுப்பு கடிதங்கள் தான் ஆதாரங்களாக இருக்கிறதே...
அதன்பின்னரும், 'நாங்கள் அப்படி எந்த தடையும் பிறப்பிக்கவில்லை' என, திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பசப்புவது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமமானது.
எங்கெங்கு காணினும் கருணாநிதி தானா?
வெ.
சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சமீபத்தில், 393 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, பிரமாண்டமான பஸ் முனையம்
சென்னை கிளாம்பாக்கத்தில், 'கலைஞர் நுாற்றாண்டு பேருந்து முனையம்' என்ற
பெயரில் திறக்கப்பட்டுள்ளது.
அந்த வளாகத்திற்குள்
அமைக்கப்பட்டுள்ள, கருணாநிதி சிலையையும் முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
இந்த பஸ் முனையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டி யதும், வளாகத்திற்குள்
அவரது சிலையை வைத்துள்ளதும் கண்டனத்திற்குரியது; அரசியல் காரணங்கள்
கொண்டது.
கருணாநிதி பெயரை விட்டால், இவர்களுக்கு வேறு பெயரே
கிடைக்கவில்லையா... வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார, தமிழ் தாத்தா
உ.வே.சா. ராஜாஜி, ராஜராஜ சோழன் போன்றோரின் பெயர்களை கூட வைத்திருக்கலாமே.
பா.ஜ.வினரை,
'காவி வர்ணம் பூசுகின்றனர்' என குற்றஞ்சாட்டும் இவர்கள், அரசு பஸ்களுக்கு
கோடிக்கணக்கான ரூபாய் செலவில், மஞ்சள் வர்ணம் பூசியது எவ்விதத்தில்
நியாயம்?
தமிழகத்தில் கருணாநிதி பெயரில், ஏதாவது ஒன்று கூட இல்லாத
கிராமங்களே இருக்க முடியாது என்ற நிலையில், அவர் பெயரை மட்டுமே திணிப்பது,
மக்கள் மனங்களில் கருணாநிதி மீதான விருப்பத்திற்கு மாறாக, வெறுப்பையே
ஏற்படுத்தக்கூடும்.
இந்திரா மறைவுக்கு பின், 1984ல் பிரதமரான
ராஜிவ், 1989ல் நடந்த லோக்சபா தேர்தலில் தோற்றதற்கு, அவரை தேவைக்கு அதிகமாக
அரசு தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப காட்டியதும் ஒரு காரணம் என்று
கூறப்பட்டதை மறந்து விட முடியாது.
தி.மு.க. அரசும் இதை உணர்ந்து, கருணாநிதி பெயரை மக்கள் மீது தேவைக்கு அதிகமாக திணிப்பதை நிறுத்துவது நல்லது.
அளவுக்கு
மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு. கருணாநிதி சிலைகளுக்கு செலவு செய்வதற்கு
பதிலாக, மழைநீர் வடிகால் திட்ட பணிகள் செய்து கொடுத்தால், மக்களுக்கு
உபயோகமானதாக இருக்கும். ஆளும் தி.மு.க. அரசு யோசிக்குமா?
காங்கிரசின் துணிவு பாரட்டத்தக்கது!
அ.ரவீந்திரன்,
குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தேசிய கட்சி, சுதந்திரத்திற்காக போராடிய கட்சி, தேசத்துக்காக ரத்தம்
சிந்திய கட்சி காங்கிரஸ்' என, மூச்சுக்கு மூச்சு பேசுகின்றனர். ஆனால்,
'ஆட்சி காலத்தில், மக்களுக்கு என்னென்ன நல்லது செய்தீர்கள்?' என கேட்டால்,
பதில் மழுப்பலாக இருக்கும்.
காலத்துக்கு தகுந்த படி வரும்
மாற்றத்திற்கு ஏற்ப, நாமும் மாற வேண்டும். அதை சாதனை என்று சொல்ல முடியாது.
ஆனால், காங்கிரசின் சாதனை அதுதான்.
வரும் தேர்தலில், பா.ஜ.வை எதிர்த்து, 205 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட காங். தயாராகி விட்டது.
'சாவது
நிச்சயம்; அது வீரனோடு மோதி சாவோம்' என்ற காங். தலைமையின் முடிவு அசாத்திய
துணிவே... பா.ஜ.வை எதிர்க்க என்னென்ன குறைகளை பேசுவீர்கள் என கேட்டால்,
காங்கிரஸ், 'திருதிரு'வென முழிக்கும்.
ஆனால், பா.ஜ.விடம்,
'காங்.கிற்கு எதிராக என்ன பேசுவீர்கள்?' என கேட்டால், 'ஊழல் கட்சிகளின்
தலைமை எனலாம், தி.மு.க.வின் சனாதன கருத்தை, காங்.கிற்கு எதிராக கொண்டு
வரலாம்...
'தேச நலனுக்கு எதிரானநடவடிக்கைகளை பேசலாம் ஹிந்துக்களின்
ராமர் கோவில் கனவுக்கு, காங். போட்ட தடைகளை பேசலாம்...' என, வரிசையாக கூற
முடியும்.
ஆக, 'இண்டியா' கூட்டணி கட்சிகளுக்கு எதிராக பேச நிறைய
உள்ளது. காங்.கின் பலம் என, முன்னாள் தலைவர் ராகுலின் நடை பயணத்தை
பேசினால், ஓட்டுகள் வர வாய்ப்பில்லை. பா.ஜ.வை, மணிப்பூர் பிரச்னையுடன்
தொடர்புபடுத்தி பேசினால், இலங்கை ஈழத்தமிழர்கள் படுகொலைகள் பற்றி பா.ஜ.
பதிலடி தரும்.
எனவே, பிரசாரத்தில் காங்கிரஸ் ஒரு கல் எறிந்தால்,
பா.ஜ. பல கற்களை எறியும். பிரதான எதிரியான பா.ஜ.வுடன் பலமாக
மல்லுக்கட்டுவோம் என, நேருக்கு நேர் களமிறங்கும், காங்கிரஸ் கட்சியின்
துணிவு வரவேற்கத்தக்கது.