/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
கள்ள ஓட்டுகளை தடுத்த தேர்தல் ஆணையத்திற்கு சல்யூட்!
/
கள்ள ஓட்டுகளை தடுத்த தேர்தல் ஆணையத்திற்கு சல்யூட்!
கள்ள ஓட்டுகளை தடுத்த தேர்தல் ஆணையத்திற்கு சல்யூட்!
கள்ள ஓட்டுகளை தடுத்த தேர்தல் ஆணையத்திற்கு சல்யூட்!
PUBLISHED ON : மார் 07, 2026 03:07 AM

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாடு முழுதும் மூன்று கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில், தமிழகத்தில் தான் அதிகளவில், 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பீஹாரில் எஸ்.ஐ.ஆர்., நடவடிக்கைக்கு பின் நடந்த சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கு மற்றும் மூன்றிலக்க ஓட்டுகள் வித்தியாசத்தில் கூட சில வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அவ்வகையில், தமிழகத்தில் வரும் தேர்தலில் நான்கு முனை போட்டியில், ஒவ்வொரு ஓட்டும் விலை மதிப்பற்றதாகவே கருதப்படும்.
உதாரணமாக, முதல்வர் ஸ்டாலினின் கொளத்துார் தொகுதியில், சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு முன், 2,90,653 ஓட்டுகள் இருந்துள்ளன. அதுவே, திருத்தப் பணிக்கு பின், 2,07,251 ஆக குறைந்து விட்டன. கிட்டத்தட்ட, 83,402 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு பின், 74 லட்சம் பேர் நீக்கப்பட்டு, தற்போது, 5.67 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
மேற்கு வங்கத்தில், 63 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; அதில், 50 லட்சம் பேர் ஊடுருவல்காரர்களாம்.
அம்மாநிலத்தின் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில், ஊடுருவல்காரர்கள் உள்ளதால் தான், கடந்த 15 ஆண்டுகளாக அதன் பலனை அடைந்து வரும் ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவி மம்தா பானர்ஜி பதறுகிறார்; சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து ஆதாயம் தேட முயற்சி செய்து வருகிறார்.
தற்போது, தமிழகத்தில் புதிதாக ஓட்டளிக்க உள்ள, 12.51 லட்சம் பேர் மற்றும் 20- - 35 வயதுக்கு உட்பட்ட இளையோரில் அதிகம் பேர் எவருக்கு ஓட்டுப் போடுவர் என்பதும், அது தி.மு.க.,விற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் அரசியல் நோக்காளர்களின் கணிப்பாக உள்ளது.
அதை ஈடுசெய்யத்தான், உரிமை தொகை, கோடை கால சிறப்பு தொகை, முதியோர், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு என பணத்தை வாரி வழங்கி, அவர்களின் ஓட்டுகளை முன்பதிவு செய்துள்ளது, தி.மு.க.,
கூடவே, 1 சதவீதம் ஓட்டு வங்கி கூட இல்லாத சிறிய கட்சிகளை எல்லாம் கூட்டணியில் இணைத்து, தேர்தலுக்கு தயாராக நிற்கிறது, தி.மு.க.,
எது எப்படியோ, தமிழகத்தில், 74 லட்சம் கள்ள ஓட்டுகள் தடுக்கப்பட்டதற்காக தேர்தல் ஆணையத்திற்கு ராயல் சல்யூட் செய்யலாம்! lll
உலக அமைதிக்கு விடப்பட்ட சவால்! ஜே.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய வான்வழித் தாக்குதலில்,
ஈரானின் அசைக்க முடியாத சக்தியாகக் கருதப்பட்ட அயதுல்லா அலி கமேனி
கொல்லப்பட்டுள்ளார். 'எபிக் பியூரி' எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதல், ஏதோ
திடீரென நடந்தது அல்ல; ஈரானின் ஆட்சியை அடியோடு மாற்றியமைக்க வல்லரசு
நாடுகள் தீட்டிய ஒரு நுணுக்கமான சதித்திட்டம்.
கடந்த 2015-ல்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம்
சரியாகவே சென்று கொண்டிருந்தது. ஈரானும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைக்
கட்டுக்குள் வைத்திருந்தது. ஆனால், 2018-ல் அதிபர் டிரம்ப் அந்த
ஒப்பந்தத்தை தன்னிச்சையாக முறித்துக் கொண்டதுதான் இன்றைய அழிவுக்கு விதை
போட்டது.
இந்த ஆண்டு துவக்கத்தில் கூட, ஓமன் நாட்டின் உதவியுடன்
பேச்சு நடத்தி, ஒரு தீர்வுக்கு வர ஈரான் முயன்றது. ஆனால், 'நாங்கள் சொல்வதை
மட்டும் கேள்' என்ற அமெரிக்காவின் பிடிவாதத்தால் அந்த வாய்ப்பு
நழுவிப்போனது.
ஈரானால் அமெரிக்காவிற்கு ஆபத்து என்கிறார்,
டிரம்ப். இதை, அமெரிக்க உளவுத்துறையே ஏற்கவில்லை. காரணம், '2035-க்கு முன்
அமெரிக்காவைத் தாக்கும் அளவுக்கு ஈரானால் ஏவுகணைகளை உருவாக்க முடியாது'
என்று அமெரிக்க அரசின் அறிக்கையே சொல்கிறது.
உண்மை இவ்வாறு இருக்கும்போது, அவசர அவசரமாக ஈரான் மீது போரைத் துவங்கியது ஏன்?
ஈரான் தன் தற்காப்புக்காக வைத்திருக்கும் ஏவுகணைகளைச் சுட்டிக்காட்டி,
அந்நாட்டின் ஆட்சியைத் தகர்க்க அமெரிக்கா போட்ட திட்டமே இப்போர்!
அதிலும், தற்போது இப்போரை தீவிரப்படுத்தக் காரணம்...
கடந்த இரு ஆண்டுகளாக நடந்த தாக்குதல்களால் ஈரான் ராணுவம் ஏற்கனவே சோர்ந்து
போயுள்ளது. அந்நாட்டிற்கு ஆதரவாக இருந்த ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள்
பலவீனப்பட்டுள்ளன.
எல்லாவற்றிற்கும் மேலாக, மக்கள் போராட்டங்களால் ஈரான் அரசு நெருக்கடியில் உள்ளது.
இந்த பலவீனமான நேரத்தைப் பார்த்து, 'இப்போது அடித்தால் ஆட்சியை வீழ்த்திவிடலாம்' என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் கணக்குப் போட்டன.
ஈராக் போரைப் போலவே இதுவும் ஒரு, 'சுத்தமான போர்' என்ற பிம்பத்தை
கட்டமைக்க நினைக்கிறது, அமெரிக்கா. ஆனால், ஈரான் சாதாரண நாடல்ல; மக்கள்
தொகையிலும் சரி, சித்தாந்த ரீதியிலும் சரி, அது அமெரிக்காவிற்குப் பெரும்
தலைவலியைத் தரும்.
ஆட்சியாளர்களை அழித்துவிடலாம், ஆனால், அதன்பின் அங்கு உருவாகும் பயங்ரவாத சக்திகளை எவரால் கட்டுப்படுத்த முடியும்?
ராஜதந்திரத்தின் வாயிலாக தீர்க்க வேண்டிய அணுசக்தி பிரச்னையை, அவசரப்பட்டு
ஆயுதங்களால் தீர்க்க நினைத்ததன் விளைவை, இன்று உலகம் அனுபவிக்கத்
துவங்கியுள்ளது.
இது தேவையில்லாத போர் மட்டுமல்ல, ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் தவறும் கூட!
ஏற்கனவே உலகப் பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ள நிலையில்,
இந்த மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பது, கச்சா எண்ணெய் விலையை
விண்ணைத் தொடச் செய்யும். இது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாமானிய
மக்களை நேரடியாகப் பாதிக்கும்.
பல்லாயிரக்கணக்கான அப்பாவி
மக்களின் உயிர்களைப் பலிவாங்கும் இத்தகைய ராணுவ நடவடிக்கைகள், ஒருபோதும்
நிரந்தரத் தீர்வைத் தராது என்பதற்கு ஈராக் மற்றும் லிபியாவின் வரலாறே
சாட்சி.
அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான போக்கு, உலக அமைதிக்கு
விடப்பட்ட பெரும் சவால். ஐக்கிய நாடுகள் சபை இதில் உடனடியாகத் தலையிட்டு
அமைதியை நிலைநாட்ட வேண்டும்!

