தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ காலியாகும் காங்கிரஸ் கூடாரம்!

காலியாகும் காங்கிரஸ் கூடாரம்!

காலியாகும் காங்கிரஸ் கூடாரம்!


PUBLISHED ON : பிப் 13, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.சந்தர் சிங், பூலுவபட்டி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: டில்லியில் ஷீலா தீட்சித் தலைமை யில், தொடர்ந்து மூன்று முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, கடந்த 2013லிருந்து தற்போது நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல் வரை, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம்!

பொதுவாகவே, கூட்டணி என்ற பெயரில் காங்., கட்சி பிறர் முதுகில் சவாரி செய்து தான் இதுவரை தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதே தவிர, தனித்து வெல்வது அக்கட்சிக்கு குதிரைக் கொம்பு!

ஒருசில மாநிலங்களை தவிர, அந்தந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகளோடும், தேசவிரோத சக்திகளோடும் கூட்டணி அமைத்து, சில தொகுதிகளில் வெற்றி பெற்று, மனதை சமாதானப்படுத்திக் கொள்கிறது.

தேசிய கட்சியை போல செயல்படாமல், பிராந்திய கட்சியைப் போல தேச நலனை சிந்திக்காமல், தேச விரோத, மதவாத சக்திகளோடும், பிரிவினைவாதிகளோடும் இணைந்து சுயநலமாக செயல்படுவதே காங்., கட்சியின் இந்த மோசமான தோல்விக்கு காரணம்!

ஆனால், தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அதை களைய எந்த முயற்சியும் எடுக்காமல், ஓட்டு இயந்திரம் மற்றும் பா.ஜ., மீது சிறிதும் வெட்கமில்லாமல் பழியை போட்டு, வெளிநாடு சுற்றுப்பயணம் கிளம்பி விடுவார், காங்., நிழல் தலைவர் ராகுல்.

கட்சிக்காக உழைப்போரை கண்டுகொள்ளாமல், தங்கள் குடும்பமே கட்சி என்ற எண்ணத்தில் அரசியல் செய்யும் காங்கிரசுக்கு இந்த தோல்வி தேவைதான்!

சுதந்திரத்திற்கு பின், காங்., கட்சியை கலைத்து விட வேண்டும் என்ற காந்தியின் எண்ணம், சோனியாவின் வாரிசுகளால் தற்போது மெல்ல நிறைவேறி வருவது கண்கூடாக தெரிகிறது!



உண்மையை மறைக்க முடியாது!


எஸ்.ஜி.பிரபு, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈ.வெ.ரா.,வை பற்றிய உண்மைகளை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டவே, திராவிட கூட்டம் வானுக்கும், பூமிக்குமாக குதிக்கின்றது.

சீமான் என்ன ஈ.வெ.ரா., கூறாததையா கூறி விட்டார்?

'பகுத்தறிவு' என்ற பெயரில், தமிழக மக்களின் புத்தியை மழுங்கடித்தது, இந்த தி.க., கூட்டம் தான்!

பல்வேறு சமுதாய சீர்திருத்தங்களை, ஈ.வெ.ரா., தான் செய்தார் என, போலியான ஒரு பிம்பத்தை உருவாக்கியது தான், இந்தக் கூட்டத்தின் சாதனை.

உண்மையில், சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க அரும்பாடு பட்டவர், ராஜாராம் மோகன் ராய் எனும் பிராமணர்; அவர் தான், இந்திய மறுமலர்ச்சியின் தந்தை!

 பெண் கல்விக்காக பாடுபட்டோரில் முக்கியமானோர், ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்திரி பாய் பூலே!

 விதவை மறுமண சட்டத்தைக் கொண்டு வர காரணமாக இருந்தவர், ஈஸ்வர சந்திர வித்யாசாகர்!

 தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர்களில் முக்கியமானோர், அயோத்திதாசர், ரெட்டை மலை சீனிவாசன்!

 சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை களைய அரும்பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மகாகவி பாரதியார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

 தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர் குத்துாசி குருசாமி!

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மதுரையில் ஆலய பிரவேசம் உரிமை பெற்று தந்தவர், வைத்தியநாத ஐயர், முத்துராமலிங்கத் தேவர்!

இப்படி உண்மையான போராளிகளை எல்லாம் மறைத்து விட்டு, இதற்கெல்லாம் காரணம் ஈ.வெ.ரா., அவர் இல்லையெனில் தமிழகத்தில் யாரும் படித்து கூட இருக்க முடியாது என்று இரு திராவிடக் கட்சிகளும் வெட்கமே இல்லாமல் பொய் பிரசாரம் செய்கிறது!

உண்மையில், தமிழகத்திற்கு ஈ.வெ.ரா., செய்தது என்ன?

தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறியது... திருக்குறளை தங்கத் தட்டில் வைத்த மலம் என்றது, சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுசரித்தது தான், ஈ.வெ.ரா., செய்த பிரசாரங்கள்.

இவற்றை பற்றி எதுவும் தெரியாமல், உடன்பிறப்புகள் ஈ.வெ.ரா.,விற்கு முட்டு கொடுக்கின்றனர்.

எத்தனை நாள் தான் உண்மையை மூடி மறைக்க முடியும்? இதோ... ஈ.வெ.ரா., எனும் போலி பிம்பம் சுக்கு நுாறாக உடையத் துவங்கி விட்டது!



அரசு த டை விதிக்க வேண்டும்!


எஸ்.உதயம் ராம், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தேசம் சுதந்திரம் பெறுவதற்கும், குடும்ப உறவுகளைப் போற்றுவதற்கும், கலை, இலக்கியத்தை வளர்ப்பதற்கும் ஆதார ஸ்ருதியாக விளங்கிய தமிழ் சினிமா, இன்று சில தறுதலைகளின் கைகளில் சிக்கி, குரங்கு கை பூ மாலையாக மாறி வருகிறது.

கதாநாயகர்களை குடிகாரர்களாக, வன்முறையாளர்களாக, பேட்டை ரவுடிகளாக்கி ஒருபுறம் இளைஞர்களை சீரழிக்கின்றனர் என்றால், மற்றொருபுறம், ஜாதி கொடுமைகளை சாடுகிறோம் என்ற பெயரில் ஜாதி வெறியை துாண்டுவதும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாய் காட்டுகிறோம் என்ற போர்வையில் வன்மம், ஆபாசம் போன்றவற்றைக் காட்டி, சினிமாவை சீரழிக்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது, பள்ளி மாணவியரை காமத்துக்கும், போதைக்கும் அலைவோராக சித்தரிக்கும் ஒரு படம் வெளியாக உள்ளது.

'கெட்ட பொண்ணு' என்று தலைப்பு வைக்கத் தைரியமில்லாத இந்த கோழைகள், பேட் கேர்ள் என்ற தலைப்பில், முன்னோட்டக் காட்சியொன்றை சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

அதில், இன்றைய பள்ளி மாணவியர் எல்லாம் காமுகிகள், குடிப்பது கும்மாளமிடுவது, ஆபாசமாய் ஆடையணிவதை தங்கள் சுதந்திரம் என்று வாதிடுபவர்; தட்டிக் கேட்டால் தற்கொலை மிரட்டல் விடுபவர் என்பது போன்ற கருத்துகளை போகிற போக்கில் பொறுப்பின்றி சொல்லியுள்ளனர்.

படத்தில், தவறான பாதையில் செல்வதாக சித்தரிக்கபட்டுள்ள மாணவி, ஒரு குறிப்பட்ட ஜாதியைச் சார்ந்தவராக சொல்லப்பட்டுள்ளார். மாற்று ஜாதி பெண்ணை தவறாக சித்தரிக்க இவர்கள் யார்?

இவர்கள் வீட்டுப் பெண்கள், இவர்களது இனப் பெண்கள் அவ்வாறு இருந்தால், அதை தைரியமாக படத்தில் சொல்ல வேண்டியது தானே?

அதற்கு நெஞ்சுரம், நேர்மை, தைரியம் இல்லாத கோழைகள், மாற்று ஜாதிக்குள் ஏன் தங்கள் அசிங்க முகத்தை ஒளித்துக்கொள்ள நினைக்கின்றனர்?

எதிர்மறை விமர்சனங்கள் வாயிலாக தங்களுக்கு விளம்பர வெளிச்சம் வேண்டும் என்றால், இவர்கள் இனப் பெண்களை குறிப்பிட்டு படம் எடுக்க வேண்டியது தானே?

ஒரு பெண்ணை பாலியல் நோக்குடன் பார்ப்பதும், சீண்டல் செய்வதும் தண்டனைக்குரிய குற்றம் என்றால், பள்ளி மாணவியரை கொச்சைப்படுத்தியும், கல்விக்கூடங்களைக் கலவிக் கூடங்களாகக் காட்சிப்படுத்தியும் நம் கலாசாரத்தைக் குட்டிச்சுவராக்கும் இவர்களுக்கு என்ன தண்டனை?

குற்றம் செய்வோரை விட, அதை செய்யத் துாண்டுவோருக்கு அதிக தண்டனை வழங்க வேண்டும் அல்லவா!

பேட் கேர்ள் படத்தை உலகின் எந்த மூலையிலும், எந்த வகையிலும், எந்த வழியிலும் வெளியிட அரசு தடை விதிக்க வேண்டும்!



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us