PUBLISHED ON : மார் 17, 2026 02:01 AM

தமிழச்சி யாருன்னு மக்களுக்கு தெரியும்!
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'என் நகப்பூச்சு, உதட்டு சாயம் எல்லாம் பார்த்து, என்னை நாகரிகப் பெண் என்று எண்ணி விடாதீர்கள்; தலையில் வேப்பெண்ணெயோடு பள்ளிக்குச் சென்ற கரிசல் பூமியைச் சேர்ந்தவள் நான்; இன்றும் நான் புழுதியும், கவிச்சி வாசமும் வீசும் கிராமத்தைச் சேர்ந்தவள் தான்' என்று கூறியுள்ளார், தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன்.
கிராமத்து கவிச்சி வாசத்துக்கும், வேப்பெண்ணெய் தலைக்கும் பதிலாக, இன்று தமிழச்சியிடம் உதட்டு சாயமும், நகப்பூச்சும் மட்டும்தான் புதிதாக குடி வந்துள்ளதா?
கையோடு நெய் வடியும் சோறு, ஆடம்பரமான கார் சவாரி, ஏழெட்டு மாளிகைகள், நிலம் நீச்சு, வங்கிக்கணக்கு என்று அரசியலுக்கு வந்து நீங்கள் சேர்த்துள்ள சொத்துக்கள், இன்றும் உங்களை அந்த மல்லாங்கிணறு ஊர் பெண்ணாகவே தான் வைத்துள்ளதா?
உயர்ந்த நிலைக்கு வந்த பின், தன்னை ஏழை என்று சொல்லிக்கொள்வது இப்போது பேஷன் ஆகிவிட்டது.
மக்களுக்கு தெரியும் ஒவ்வொரு அரசியல்வாதியும், அரசியலுக்கு வருவதற்கு முன் எப்படி இருந்தனர், அரசியல் பிரவேசத்திற்கு பின் எப்படி இருக்கின்றனர் என்பது!
ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் வந்தவர்கள் எல்லாம், கட்சி என்ற கம்பெனி ஆரம்பித்து, இன்று நாட்டையே வளைத்துப்போட்டுள்ளது இந்தியாவே அறிந்த வரலாறு தானே!
சுதந்திரத்திற்காக அரை ஆடை உடுத்தி, ஆங்கிலேயனுக்கு அறை கூவல் விட்ட காந்திஜியோ, மாற்று வேட்டி கூட இல்லாத உண்மையான கம்யூனிஸ்ட் தோழர் ஜீவானந்தமோ, மருந்து வாங்கக் கூட காசில்லாமல், அரசு மருத்துவமனையில் தன் இறுதி காலத்தில் பொது வார்டில் அனுமதிக்கப்பட்ட அன்றைய அமைச்சர் கக்கனோ, இறக்கும்போது வெறும், 200 ரூபாய் மட்டும் இருப்பு வைத்திருந்த கர்மவீரர் காமராஜரோ இல்லை இவர்கள்!
அரிதாரம் பூசாமல் நடிக்கும் இந்த அரசியல் எத்தர்கள், தங்களை ஏழை என்றும், ஏழைப் பங்காளர்கள் என்றும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம் என்றும் வசனம் பேசி, சொத்துக் குவிப் பதில் கில்லாடிகள்!
மை டியர் மார்த்தாண்டன் என்று ஒரு திரைப்படம். அதில் பட்டாடையும், நகைகளும் அணிந்து, தன் பணியாளோடு கிராமத்திற்கு வருவார் நடிகர் பிரபு. அவரைப் பார்த்து தமாஷ் நடிகர் கவுண்டமணி, 'நீங்க யாரு?' என்று கேட்பார். அதற்கு பிரபு, 'நாங்க ரொம்ப ஏழைங்க' என்பார்.
'உங்களை பார்த்தாலே தெரியுதே, நீங்க ரொம்ப ஏழைங்க!' என்று சொல்வார், கவுண்டமணி.
அதுபோல் உள்ளது தமிழச்சியின் பேச்சு!
நீங்க யாருன்னு மக்களுக்குத் தெரியும்; மக்கள் யாருன்னு உங்களுக்குத் தெரியும். இதில் எதற்கு இந்த நடிப்பு?
பலத்தை தேர்தல் முடிவு பறைசாற்றும்! ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு நீண்ட இழுபறிக்குப் பின், முடிவுக்கு வந்துள்ளது. காங்., கட்சிக்கு கூடுதலாக மூன்று இடங்கள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டாலும், இந்த உடன்பாடு இரு கட்சி களுக்கு இடையே ஒருவிதமான கசப்புணர்வையே ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, தி.மு.க., கூட்டணி என்பது, கிட்டத்தட்ட, 20க்கும் மேற்பட்ட கட்சிகளைக் கொண்ட ஒரு நெரிசலான கூட்டணியாக மாறியுள்ளது. இதில், புதிதாக இணைந்துள்ள தே.மு.தி.க., மற்றும் அ.தி.மு.க.,விலிருந்து விலகி வந்திருக்கும் புதிய முகங்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில், தி.மு.க., தலைமை திணறி வருகிறது.
நீண்டகாலமாக கட்சிக்காக உழைத்த உடன் பிறப்புகளை புறக்கணித்து விட்டு, புதியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தும்; களத்தில் தங்கள் அதிருப்தியை அவர்கள் வெளிப் படுத்துவர்.
குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, காங்., கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், 'தி.மு.க.,வின், 'சுமையை' காங்., சுமக்க வேண்டியிருக்கிறது' என்று கூறிய கருத்துகள், தி.மு.க., தொண்டர்களை காயப் படுத்தியுள்ளது.
தலைமை அளவில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம்; ஆனால், தேர்தல் களத்தில் தொண்டர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் பணியாற்றினால் மட்டுமே வெற்றி சாத்தியமாகும்.
தலைவர்கள் கை குலுக்கிக் கொள்வது மட்டும் போதாது; அடிமட்ட தொண்டர்களிடமும் அது எதி ரொலிக்க வேண்டும்.
தற்போது, தி.மு.க., கூட்டணி பலம் மிகுந்ததாக தெரிந்தாலும், தேர்தல் முடிவு மட்டுமே அதன் உண்மையான பலத்தை பறைசாற்றும்!
lll அரசு கவனம் செலுத்துமா? சு.செல்வராஜன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஆண்டுக்கான குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில், தமிழகத்தைச் சேர்ந்த, 56- பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
தற்போது, தமிழிலேயே இத்தேர்வை எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளதால், தமிழ்வழி மாணவர்கள் ஆங்கிலம் குறித்து பயம் கொள்ளாமல் இனி தைரியமாக தேர்வை எழுதலாம்.
உதாரணமாக, இந்திய வரலாறை விருப்பப்பாட மாக தேர்வு செய்யும் பட்சத்தில், ஆங்கிலத்தில் உள்ள அப்பாடங்களை படித்து புரிந்து கொள்ளும் திறன் இருந்தாலே போதும்; தேர்வில் விடைகளை தமிழில் எழுதலாம்.
இதுவரை அரசுப் பள்ளிகளில் படித்து பட்டதாரியானவர்கள், ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டுமே என நினைத்து, குடிமைப்பணித் தேர்வுகளை எழுதுவதில்லை.
இதனால், ஒருகாலத்தில் தமிழகத்தில், 10 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இத்தேர்வில் தேர்வாகிய நிலையில், கடந்த முப்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், 5 சதவீதம் பேர் மட்டுமே வெற்றி பெற்று வருகின்றனர். தற்போது, தமிழில் தேர்வு எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், இதைப் பயன்படுத்தி, அதிகப்படியானவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
அதேநேரம், நேர்காணல் வரை சென்று தோற்பவர்களை, தமிழக அரசு குரூப் -1 பணிகளில் நேரடியாகப் பணியமர்த்த வேண்டும். இதனால், அரசு தனியாக பெரும் செலவு செய்து, குரூப் -1 தேர்வு நடத்தும் தேவை இருக்காது; குடிமைப்பணித் தேர்வை எழுத அதிகம் பேர் முன் வருவர்.
மேலும், குடிமைப்பணிப் பாடத்திட்ட நுால்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் இருப்பதால், அவற்றை தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிடவும் அரசு முன்வர வேண்டும்!
l

