PUBLISHED ON : ஜூலை 04, 2026 12:27 AM

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், சமீபத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி, 'நாய்க்கடியால் பலியான ஆடுகளுக்கு, நிலுவையில் உள்ள 38 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு எப்ப கொடுப்பீங்க?' என கேள்வி எழுப்பினார்.
கலெக்டர் நர்னாவாரே மணீஷ், 'துறை சார்ந்த அதிகாரிகள் பதில் சொல்லுங்க' என்று நழுவ, 'சார், நான் உங்களைத்தான் கேட்கிறேன்; நீங்க பதில் சொல்லுங்க' என, வேலுசாமி கிடுக்கிப்பிடி போட்டார்.
கலெக்டரோ, 'நிலுவை தொகை நிச்சயம் வந்துடும்' என்றார். விடாத சங்க தலைவரோ, 'வந்துடும்னு தெரியும் சார்; எப்ப வரும்னு சொல்லுங்க' என கேள்வி எழுப்பினார்.
இதை பார்த்த விவசாயி ஒருவர், 'ரெண்டு பேரும் விடாக்கண்டன், கொடாக்கண்டனா இருக்காங்களே...' என முணுமுணுக்க, சக விவசாயிகள் ஆமோதித்து சிரித்தனர்.
