PUBLISHED ON : ஜூலை 26, 2026 12:43 AM

சென்னை, திருவொற்றியூரில் மூடப்பட்ட அண்ணாமலை நகர் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடப்பவர்களால், அதிக உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறி, ரயில்வே நிர்வாகம், அப்பகுதியை கற்களால் அடைக்கும் பணியை சமீபத்தில் மேற்கொண்டது. இதற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த, திருவொற்றியூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார், ரயில்வே அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். எம்.எல்.ஏ., அங்கிருப்பது தெரியாமல் ஒரு பெண், 'எம்.எல்.ஏ., வரார்னு சொல்லியிருக்காங்க' என மற்றொரு பெண்ணிடம் கூறினார்.
இதை பார்த்த நிருபர் ஒருவர், 'நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க' என கேட்க, அப்பெண், 'விசிலுக்கு தான்' என்றார். உடனே நிருபர், 'உங்க எம்.எல்.ஏ., வந்து ரொம்ப நேரமாச்சு' என, எம்.எல்.ஏ.,வை சுட்டிக்காட்டினார்.
சக நிருபரோ, 'தங்களது எம்.எல்.ஏ., யார்னு இன்னும் தெரியாம இருக்காங்களே' என, 'கமென்ட்' அடிக்க, அங்கு சிரிப்பலை எழுந்தது.
