PUBLISHED ON : செப் 06, 2026 01:22 AM

தமிழக சட்டசபையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்து வருகிறது.
காங்கிரசைச் சேர்ந்த சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலுரை அளித்தபோது, ஆரம்பத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு புகழாரம் சூட்டி, அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின், 'வருங்கால பிரதமர்...' என அவர் கூறியதும், அமைச்சர்கள் மற்றும் த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆரவாரமாக மேஜையை தட்டி வரவேற்றனர்.
அதன்பின் ராஜேஷ்குமார், 'வருங்கால பிரதமர் ராகுல்' என்றதும், ஒருவருக்கொருவர் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டனர்.
அடுத்த சில நாட்களில், காங்கிரசைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பதிலுரை வழங்கியபோது, 'வருங்கால பிரதமர்' என்றதும், த.வெ.க.,வினர் யாரும் மேஜையை தட்டி வரவேற்பு அளிக்கவில்லை.
இதை பார்த்த சட்டசபை அதிகாரி ஒருவர், 'அன்று ஏமாந்துட்டதால இன்று சுதாரிச்சிட்டாங்களே' என முணுமுணுக்க, சக அதிகாரிகள் சத்தமின்றி சிரித்தனர்.
