PUBLISHED ON : செப் 05, 2026 12:58 AM

வேலுார் மாவட்டம், காட்பாடி நகர தி.மு.க., சார்பில், சமீபத்தில் கருணாநிதி நினைவு நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று பேசுகையில், 'காட்பாடியை அங்குலம் அங்குலமாக செதுக்கியவர், முன்னாள் அமைச்சர் துரைமுருகன். இந்த தேர்தலில், இங்கு துரைமுருகன் தோற்றது, அண்ணாதுரை தோற்றதற்கு சமம். இன்றைக்கு மக்களுக்கு எதுவும் தெரியாது.
'இன்னும் ஆறு மாதங்கள் போகட்டும். அதன்பின், காட்பாடி மக்கள் துரைமுருகன் வீட்டு வாசலில் வந்து நின்று, காவல் தெய்வமே, நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என கதறுவர்' என்றார்.
இதைக் கேட்ட கட்சி நிர்வாகி ஒருவர், 'மக்கள் வந்து நம்ம வீட்டு வாசல்ல நிற்க போறதில்ல... அடுத்து வர்ற உள்ளாட்சி தேர்தல்ல, நாம தான் அவங்க வீட்டு வாசல்ல போய் நிற்கணும்' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்து சிரித்தனர்.
