PUBLISHED ON : ஜூலை 02, 2026 12:58 AM

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி கூட்டம், காங்., கட்சியை சேர்ந்த மேயர் சரவணன் தலைமையில் சமீபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு வந்திருந்த பத்திரிகையாளர்களுக்கு உட்கார இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படாததால், அவர்கள் தரையில் அமர்ந்து செய்தி சேகரித்தனர்.
ஆவேசமடைந்த, தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும், 'பத்திரிகையாளர்களுக்கு இடமளிக்கும் வரை நாங்களும் உட்கார மாட்டோம்' எனக் கூறி, எழுந்து நின்று கோஷமிட்டனர். அதன்பின் அதிகாரிகள் தலையிட்டு, பத்திரிகையாளர்களுக்கு இருக்கை வசதி செய்து கொடுத்தனர்.
இருக்கையில் அமர்ந்த மூத்த நிருபர் ஒருவர், 'கவுன்சிலர் சீட் வாங்க இவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க... அதனால தான், நாம உட்கார சீட் இல்லாம சிரமப்பட்டதை பார்த்து, குரல் கொடுத்து சீட் வாங்கி கொடுத்துட்டாங்கப்பா...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.
