PUBLISHED ON : செப் 10, 2011 12:00 AM

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி பேட்டி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழலில், விரைவில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் சிக்குவார்.
அவர் சிறைக்குப் போக இப்போதே தயாராகிக் கொள்வது நல்லது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., சவுந்திரராஜன் பேச்சு: டீசல் சிக்கனம் என்ற ஒரே காரணத்திற்காக அரசு பஸ்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தனியார் பஸ்களுடன் போட்டி போட முடியவில்லை. தனியார் பஸ்களில் உள்ள தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் அரசு பஸ்களிலும் ஏற்படுத்த வேண்டும்.
தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, பயங்கரவாதிகளுக்கு துணையாக நிற்பது போன்று வெளி உலகிற்கு தெரிகிறது. அது இல்லாமல் ஆக வேண்டும் என்றால், வாஜ்பாய் அரசு கொண்டு வந்த பயங்கரவாதி எதிர்ப்பு சட்டமான, 'பொடா' போன்ற சட்டங்களை மத்திய அரசு உடனே கொண்டு வர வேண்டும்.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, 'குபீர்' சிரிப்பு பேச்சு : தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலன் சார்ந்த கொள்கையுள்ள ஒரே கட்சி, பா.ம.க., தான். தமிழக மக்களுக்காக இந்தக் கட்சி தான் பாடுபடுகிறது.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம. கோபாலன் அறிக்கை: தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதான கைது நடவடிக்கை வரவேற்கத் தக்கது. அவர்களை கோர்ட் காவலில் வைக்காமல், போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்.
சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் பேச்சு: இந்தியாவில் உள்ள, 538 பல்கலைக் கழகங்களில், சென்னைப் பல்கலைக் கழகம், ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. விரைவில் முதல் இடத்தைப் பிடிக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். பாடத் திட்டத்தில் தேவையான மாற்றங்களை செய்வதுடன், கற்பிப்பதிலும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.