PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM

தமிழக காங்., மூத்த தலைவரான, கே.எஸ்.அழகிரி பேட்டி:மும்மொழி
கொள்கையில், மத்திய அரசு பெரியண்ணன் போக்கை கடைப்பிடிக்கிறது. ஆங்கிலம்
படித்தால், உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம். ஹிந்தியை
நேரடியாக கொண்டு வந்தால், தி.மு.க., அரசு ஏற்காது என்பதால், குறுக்கு
வழியில் மும்மொழி கொள்கை என்று கொண்டு வர, மத்திய அரசு துடியாய்
துடிக்கிறது.
ஹிந்திக்கு எதிரான இவரது கருத்தை, இவரது கட்சியின் தேசிய தலைவர்கள் சோனியா, பிரியங்கா, ராகுல் ஏத்துக்குவாங்களா?
சென்னை மாநகராட்சி நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் தனசேகரன் பேச்சு: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 356 பள்ளிகளில், 49,147 குழந்தைகள் பயன்பெறும், முதல்வரின் காலை உணவு திட்டத்தை உலகம் போற்றுகிறது. இந்த திட்டத்தில், லாப நோக்கில் உணவு வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்து, அப்பணியை மாநகராட்சியே தொடர முடிவு செய்ததற்கு நன்றி. அதே நேரத்தில், முதல்வரின் இந்த மகத்தான திட்டம், எந்தவித குறைபாடும் ஏற்படாமல் சிறப்பாக செயல்பட, குழு அமைத்து தினமும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஆளுங்கட்சியை சேர்ந்த இவரே கோரிக்கை வைக்கிறாருன்னா, திட்டத்துல குறைபாடுகள் இருக்குதோ என்ற கேள்வி எழுதே!
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர், ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ அறிக்கை: தமிழக மீனவர்கள் பிரச்னையில், இலங்கை அரசை மனிதாபிமானத்துடன் முடிவு எடுக்க வைத்து, தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் சட்டத்தை திரும்ப பெற, மத்திய அரசு ராஜதந்திர நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைக்கு மத்திய அரசு செய்யும் உதவிகளை நிறுத்துவோம்னு மிரட்டல் விடுத்தாலே, அந்த நாடு வழிக்கு வந்துடும்... அதை செய்ய மாட்டேங்கிறாங்களே!
ஹிந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிகுமார் அறிக்கை: த.வெ.க., தலைவர் விஜய், வெள்ளை லுங்கி கட்டி, குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடித்தாலும், அவரின், துப்பாக்கி படத்தை முஸ்லிம்கள் மறக்க மாட்டார்கள். ஆதவ் அர்ஜுனாவும், சி.டி.நிர்மல்குமாரும், ஆனந்தும் குல்லா போடாமல், அவரை மட்டும் குல்லா போட வைத்துள்ளனர். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத விஜய், குல்லா போட்டு நோன்பு கஞ்சி குடிப்பது ஓட்டு நாடக அரசியல்.
'இப்தார்' விருந்தில் பங்கேற்கும் திராவிட கட்சிகளின் பாணியை விஜயும் தத்து எடுத்துக்கிட்டது நல்லாவே தெரியுது... இப்படிப்பட்டவர் என்ன மாற்றத்தை கொண்டு வந்துட போறாரு?