PUBLISHED ON : டிச 02, 2024 12:00 AM

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:
த.மா.கா., துவக்கி, 11ம் ஆண்டில்
அடி எடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுமக்களின் அவசர, அவசிய
தேவைகளை அறிந்து, அவர்களுக்கு துணை நிற்கும் வகையில் பணிகள் செய்வதும்,
தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதும் பெருமைக்குரியது. கட்சி வளர
வேண்டும் என்பதற்காக, உறுப்பினர் சேர்ப்பு பணியில் கட்சியினர் சிறப்பாக
ஈடுபட்டு வருவதும் பாராட்டுக்குரியது.
அப்படியே இந்த, 11 வருஷத்தில் இவங்க கட்சி சாதித்தது என்னான்னு ஒண்ணு, ரெண்டு விஷயத்தை சொல்ல முடியுமா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தெலுங்கானாவில், நவம்பர் 6ல் துவங்கிய ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, கடந்த, 24 நாட்களில், 92 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். தமிழகத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, சமூக நீதி வழங்க, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், தி.மு.க., அரசை, சமூக நீதி காவலர், வி.பி.சிங் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது.
'அடுத்து அமைய போகுற கூட்டணி ஆட்சியில், பா.ம.க., அங்கம் வகிக்கும்'னு நீங்க சொல்வீங்க பாருங்க... அப்ப தான் கணக்கெடுப்பு நடத்துவாங்க போல!
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிக்கை:
இந்தியாவின் இணைய பயனாளிகளில், 15 சதவீதம் பேர், 5 முதல், 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என, 'இன்டர்நெட் அண்டு மொபைல் அசோஸியேஷன் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் அறிக்கை கூறுகிறது. ஆபாச இணையதளங்களால் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படுவதை தடுக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபாச இணையதளங்களை தடைசெய்ய வேண்டும்.
இணையம் என்றாலே ஆபாசம் தானா... இப்ப பள்ளிகளில் பெரும்பாலான வகுப்புகள் ஆன்லைனில் தானே நடக்குது... அதுக்கெல்லாம் இணையதளத்தை தானே பயன்படுத்தி ஆகணும்!
தமிழக, பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
நீலகிரியில் லஞ்சம் வாங்கி, முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, நீலகிரி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கிர் பாஷாவை, திருநெல்வேலி மாநகராட்சி துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்தது தான் திராவிட மாடல் ஆட்சியா; நீலகிரியில் லஞ்சம் வாங்கியவர், திருநெல்வேலியில் நேர்மையாக இருப்பாரா... இதென்ன கோமாளி கூத்து?
குற்றம் செஞ்சவங்களை மன்னித்து, அவங்களுக்கு பெரிய பொறுப்பு கொடுத்து பெருந்தன்மை காட்டுறது எல்லாம், இயக்குனர் விக்ரமன் படத்துல தான் நடக்கும்... ஒரு வேளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, அந்த மாதிரி படம் எதுவும் சமீபத்தில் பார்த்திருப்பாரோ?