PUBLISHED ON : டிச 09, 2024 12:00 AM

ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ பேச்சு:
மூத்த
குடிமக்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு
வழங்கப்பட்டிருந்த ரயில் கட்டண சலுகை, கொரோனா தொற்றுக் காலத்தில்
நிறுத்தப்பட்டது. அது, சலுகையே அல்ல; அது அவர்களின் உரிமை. அதை வழங்க
வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால், ரயில்வே அமைச்சரின் பதிலை
பார்த்தால், இனி ஒருபோதும் அந்த சலுகை மீண்டும் வழங்கப்படாது என்பதையே உணர
முடிகிறது.
உரிமையை கேட்டு, உங்க தந்தை வைகோ பாணியில், சென்னை டூ டில்லிக்கு ஒரு பாத யாத்திரையை போட்டுட வேண்டியது தானே!
தி.மு.க.,வில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ள, செய்தித் தொடர்பு முன்னாள் செயலர், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: மழை, வெள்ள பாதிப்புகளில் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், 'உதயநிதியின் உதய நாள்' என்ற தலைப்பில், 364 பேச்சாளர்கள் பங்கு பெறும், 182 கூட்டங்களை, நான்கு நாட்களாக வெகு விமரிசையாக அமைச்சர், மா.சுப்பிரமணியன் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எவ்வளவு முக்கியம் பாருங்கள்.
உதயநிதியின் பிறந்த நாளை விட, இந்த நாட்டு மக்களுக்கு மழை, வெள்ள பாதிப்புகள் முக்கியமா போயிடுச்சா?
'தமிழருவி' மணியன் தலைமையிலான, காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச்செயலர் குமரய்யா பேச்சு: ஊட்டி நகராட்சி ஆணையர், ஜஹாங்கீர் பாஷா, கணக்கில் வராத, 11 லட்சம் ரூபாய் வைத்திருந்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் சிக்கினார். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஆனால், இரண்டே வாரத்தில் நெல்லை மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். திராவிட மாடல் என்றால், ஊழலை ஊக்குவிக்கும் மாடல் ஆட்சி என, சொல்லலாம்.
'கை நீட்டி அவர் யாரிடமும் லஞ்சம் வாங்குனா தான் குற்றவாளி' என, வியாக்கியானம் பேசுவாங்களோ?
தமிழக, பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: சமீபத்தில், அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோவை பார்த்தேன். அதில், 'ஒரு முறை ஜெயலலிதா என்னிடம், துரைமுருகன் அவர்களே, நீங்கள் நல்லவேளையாக எங்கள் சினிமா துறைக்கு வரவில்லை. வந்திருந்தால் சிவாஜி கணேசன் இருந்திருக்க மாட்டார்' என, கிண்டல் செய்து விமர்சனம் செய்ததைக் கூட உணராமல், ஜெ., தன்னை குறிப்பிட்டு பேசியதையே பெருமையாக எண்ணிக் குறிப்பிட்டுள்ளார்.
பலரையும் எள்ளி நகையாடும் துரைமுருகனையே, ஜெ., சாமர்த்தியமா கலாய்ச்சிருக்காங்களே!