PUBLISHED ON : பிப் 09, 2025 12:00 AM

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: இட
ஒதுக்கீடுகளும், சமூக நீதியும் முறையாக அமலாக்கப்படுகின்றனவா
என்பதை கண்காணிக்கக் கூடிய அமைப்பாக உச்ச நீதிமன்றம் உள்ளது.
அத்தகைய உயரிய அமைப்புகளில் அனைத்து சமுதாயத்தினரும்
நீதிபதிகளாக அமர்த்தப்படும் போது தான், மக்களுக்கு
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்படும்; சமூக நிதியும்
நிலைநாட்டப்படும்.
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: கடந்த சில ஆண்டுகளாக, பெண் போலீசார் மீது தாக்குதல், டி.எஸ்.பி., மீது தாக்குதல், சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, போலீஸ் அதிகாரி கல்பனா நாயக்கின் கொலை முயற்சி புகார், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில்மாணவிக்கு பாலியல் தொல்லை என, தமிழகம் அமளிக்காடாக மாறி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகள் சட்டம் - ஒழுங்கு குறித்த முழுமையான வெள்ளை அறிக்கையை தி.மு.க., அரசு வெளியிட வேண்டும்.
தி.மு.க., அரசின் நான்காண்டு கருப்பு சரித்திரத்தை வெள்ளை அறிக்கையா கேட்டா, உடனே கிடைச்சிடுமா என்ன?
தமிழக காங்., பொதுச்செயலர் ரமேஷ்குமார் அறிக்கை: 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் வாயிலாக, தயாரிப்பு துறையை ஊக்குவிக்க, மத்திய அரசு தவறி விட்டது. அதன் காரணமாக, சீனப்படைகள் இந்திய மண்ணில் ஊடுருவ துவங்கிவிட்டன. இந்த முக்கியமான பிரச்னையை, பார்லிமென்டில் ராகுல் பேசியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தேசம் எதிர்கொள்ளும் பேராபத்து குறித்து பேசும் உரிமையும், கடமையும், பொறுப்பும் ராகுலுக்கு உண்டு.
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புடன் செயல்படணும் என்றால், ஆதாரங்களுடன் குற்றம் சாட்டணும்... பொத்தாம் பொதுவாக பேசிட்டு போகக் கூடாது!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு முழு அகவிலைப்படி உயர்வை, வரும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். அதை விடுத்து, ஓய்வூதியர்களை ஏமாற்றும் செயல்களில் அரசு ஈடுபட்டால், ஒரு லட்சம் ஓய்வூதியர் குடும்பங்களின் சாபம், தி.மு.க., அரசை வீழ்த்தும் என்று எச்சரிக்கிறேன்.
தி.மு.க., அரசு வீழணும்னு தானே இவரும் போராடுறாரு... அதனால, எச்சரிக்காம கமுக்கமா இருந்திருக்கலாமே!

