PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM

த.மா.கா., பொதுச்செயலர் யுவராஜா அறிக்கை: ரூபாய்
என்ற சொல், சமஸ்கிருதத்தில் உள்ள, 'ருப்யா' என்ற சொல்லில் இருந்து
வந்தது. ரூபாய் குறியீடான இது ஒரு மதத்தையோ, மொழியையோ
குறிக்கவில்லை. தமிழன் கண்டுபிடித்து இந்தியாவுக்கே பெருமை
சேர்த்து, உலக அளவில் இந்தியாவை தலைநிமிர செய்த இந்த செயலை
அவமதிக்கும் விதமாக ஸ்டாலின் அரசு, 'ரூ' என மாற்றியுள்ளது. இது
ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கு ஏற்படுத்திய அவமானம்.
தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் அறிக்கை: நிலம் எடுப்பதில் தி.மு.க., அரசு அலட்சியம் காட்டியதால், திண்டிவனம் -- திருவண்ணாமலை ரயில் பாதை திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் திருவண்ணாமலைக்கு தினசரி வந்து செல்கின்றனர்.ஆனால், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் பாதை இல்லாதது, பெரும் குறையாக உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வேலு, முதல்வரிடம் செல்வாக்கு பெற்ற நபரா இருந்தும், இதுல ஆர்வம் காட்டாதது ஏன்?
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேட்டி: தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிப்பதை தே.மு.தி.க., ஏற்றுக் கொள்ளாது. தமிழகத்தில் உள்ள லோக்சபா தொகுதிகள் குறைக்கப்பட்டால், அதற்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்போம்.
என்னதான் தமிழக அரசுக்கு விழுந்து விழுந்து ஆதரவு தெரிவிச்சாலும், இவர் எதிர்பார்க்கும் ராஜ்யசபா சீட் அங்ேகயும் கிடைக்காது!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: தி.மு.க.,ஆட்சியில் அறிவியல்பூர்வமான ஊழல்கள் நடப்பது வழக்கம். டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதை அனைவரும் அறிவர். ஊழலுக்கு எதிராக கட்சி துவங்கிய கெஜ்ரிவால், ஊழல் செய்ததால் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார். வரும் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கும் அதே நிலை ஏற்படும்.
வரும் 2026 சட்டசபைதேர்தலில் தி.மு.க., தோற்கும் என, போகுமிடம் எல்லாம் சொல்றாரே... தி.மு.க., கூட்டணி வலுவாக இருந்து, இவங்க அணி 'வீக்'கா இருப்பதால், இவரதுஆரூடம் பலிக்குமா என்பது கேள்விக்குறிதான்!