PUBLISHED ON : மார் 31, 2025 12:00 AM

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி:
த.வெ.க., பொதுக்குழுவில்
பேசிய அதன் தலைவர் விஜய், 'தி.மு.க.,வுக்கும், த.வெ.க.,வுக்கும் தான்
போட்டி' என, அவரது ஆசையை சொல்லியுள்ளார். தி.மு.க.,வின் மக்கள் விரோத
ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர, தே.ஜ., கூட்டணி தான் மாற்று அணி. அதற்கு வலு
சேர்க்கும் வகையில், தி.மு.க.,விற்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள்,
தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
தி.மு.க.,வையும், பா.ஜ.,வையும் சேர்ந்தே எதிர்க்கும் விஜய், தே.ஜ., கூட்டணியில் எப்படி இணைவார்?
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர், டாக்டர் சரவணன் பேச்சு:
சிறுபான்மை இன மக்களை, ஓட்டு வங்கியாக தான், முன்னாள் முதல்வர் கருணாநிதி பார்த்தார். அவரை தொடர்ந்து, தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் அப்படியே தான் பார்க்கிறார். அ.தி.மு.க.,வில் இன்றைக்கு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த தமிழ் மகன் உசேனை, அவைத்தலைவராக பழனிசாமி நியமித்துள்ளார். இதே போல, தி.மு.க.,வில் உயர் பொறுப்பில் சிறுபான்மை இன மக்களை ஸ்டாலின் நியமித்தது உண்டா?
இவரது கட்சியின் அவைத்தலைவருக்கு நிகராக, தி.மு.க.,வில் பொதுச்செயலராக துரைமுருகன் இருக்காரே... அவருக்கு இருக்கும் அதிகாரம், தமிழ் மகன் உசேனுக்கு இருக்கிறதா?
எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின் தலைவர் லியாகத் அலிகான் அறிக்கை:
'டில்லியில் உள்ள கட்சி அலுவலகத்தை பார்வையிட வந்தேன்' என, பொய் சொன்ன பழனிசாமி, ஐந்து மணி நேரத்தில், 'மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழகம் குறித்த கோரிக்கைகளை தெரிவிக்க வந்தேன்' என்ற மற்றொரு பொய்யை அவிழ்த்து விட்டார். பாம்புக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டி, தொண்டர்களை எவ்வளவு காலம் தான் ஏமாற்றுவார்?
அவரது கட்சியின் தொண்டர்களே, பா.ஜ., கூட்டணியை விரும்புவது இவருக்கு தெரியாதோ?
ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் பேட்டி:
ஒடுக்கப்பட்ட பலருக்காக நாங்கள் போராடுகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி, அருந்ததி இன மக்களுக்கு, 3 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார்; அதை முதல்வர் ஸ்டாலின் பாதுகாத்தார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் தவறில்லை. அனைத்து ஆட்சியிலும் வன்கொடுமை, தீண்டாமை பிரச்னை நடக்கிறது. தி.மு.க., அரசு ஜாதியவாதிகளை அடக்க வேண்டும். வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த ஆட்சி முடிவுக்கு வரும் வரை, வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவே மாட்டாங்க!