PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில் முக்கிய ரயில்
பாதைகள் அனைத்தும் இரட்டை பாதையாக உள்ளன. ஆனால், வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த கோவில்கள் உள்ள, விழுப்புரம் - தஞ்சை வழித்தடம், ஒரு வழிப்
பாதையாகவே உள்ளது. 2028ல் உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா
நடக்கஉள்ளது. இதில் பங்கேற்க, நாடெங்கும் இருந்து பல லட்சக்கணக்கான
பக்தர்கள் வந்து செல்வர். இப்போதுள்ள ஒற்றை ரயில் பாதையில், இந்த பக்தர்கள்
கூட்டத்தை கையாள்வது சாத்தியமற்றது. எனவே, விழுப்புரம் -- தஞ்சை ரயில்
பாதையை, இரட்டை பாதையாக்குவது காலத்தின் கட்டாயம்.
பா.ம.க.,
சார்பில், ஏ.கே.மூர்த்தி, வேலுன்னு ரெண்டு பேர் மத்திய ரயில்வே இணை
அமைச்சர்களா பதவி வகித்தப்பவே, இரட்டை ரயில் பாதை போட்டிருக்கலாமே!
அ.தி.மு.க.,வை சேர்ந்த, சுகாதார துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி: மக்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், முன்னாள் முதல்வர் பழனிசாமி எழுச்சி பயணம் துவங்கியுள்ளார். இந்த பயணம், தமிழகத்தில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி, ஆட்சி மாற்றத்திற்கான ஒரு நிகழ்வாக அமையும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுதுமாக சீர்குலைந்து உள்ளது. அதற்கு, திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணமே சாட்சி.
'சட்டம் - ஒழுங்கு சரியாக இருப்பதற்கு, பழனிசாமியின் எழுச்சி பயணமே சரியான சாட்சி'ன்னு தி.மு.க., தரப்பினர் பதிலடி தந்தாலும் தருவாங்க!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமார் கொலை வழக்கில், முதல்வர் ஸ்டாலின் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதேபோல், சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பலாத்கார வழக்கையும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கையும் சி.பி.ஐ., விசாரணைக்கு ஏன் மாற்றி உத்தரவிடவில்லை?
எல்லா வழக்கையும் சி.பி.ஐ.,யிடம் கொடுத்துட்டா, மாநில போலீசாருக்கு வேலை தர வேண்டாமா?
தமிழக இளைஞர் காங்., முன்னாள் தலைவர் லெனின் பிரசாத் பேச்சு: தமிழகத்தில், காங்கிரஸ் கட்சி பலவீனமாகஇருப்பதாக, வி.சி., கட்சியின் துணை பொதுச் செயலர் வன்னியரசு பேசியிருப்பது, அவரது அரசியல் அறியாமையை காட்டுகிறது. காங்கிரஸ் என்பது சாதாரண கட்சி அல்ல; நாட்டின் சுதந்திரபோராட்டத்தையும், இந்திய அரசியலமைப்பையும், பல முக்கியமான சமூக நலத்திட்டங்களையும் வகுத்த கட்சி அது.
வாஸ்தவம் தான்... அதே நேரம், இமாலய அளவிலான ஊழல்கள் நடந்ததும் காங்., ஆட்சியில் தானே!