PUBLISHED ON : செப் 25, 2025 12:00 AM

திருவள்ளூர் தொகுதி காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் பேட்டி:
ஓட்டு திருட்டு எப்படி நடக்கிறது என்பதை நாட்டுக்கு ராகுல்
எடுத்துரைத்தார். இந்த ஓட்டு திருட்டு பா.ஜ.,வினரால் நேர்த்தியாக
நடத்தப்படுகிறது. இது, அரசியல் கட்சியினரின் பிரச்னை மட்டும் அல்ல; ஒவ்வொரு
வாக்காளரின் பிரச்னையும் கூட. அதை மக்கள் கவனத்திற்கு எடுத்துச்
செல்வதற்காகவும், தேர்தல் ஆணையத்தின் ஒருதலை பட்சமான செயல்பாட்டை
கண்டித்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்
நடத்தப்படுகிறது. 'ஓட்டு திருட்டெல்லாம் சாத்தியமே இல்லை'ன்னு தேர்தல்
கமிஷனே மறுத்துட்ட பிறகும், புளித்து போன மாவையே திரும்ப திரும்ப
அரைக்கிறாங்களே!
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கேடுகெட்ட அமைச்சரை வைத்து ஆட்சி நடத்துவதாக செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். ஆனால் இன்றோ, 'கோடு போட்டால் ரோடு போடும் பாலாஜி' என அவரையே புகழ்ந்து பேசுகிறார். ஆனால், பா.ஜ.,வில் இருப்பவர்கள் எல்லாம், ரோடு போட்டு மேம்பாலத்தையே கட்டும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவர்கள்.
மேம்பாலமே கட்டுவாங்க என்றால், 'செந்தில் பாலாஜியை விட ஜெகஜ்ஜால கில்லாடிகள் பா.ஜ.,விலும் இருக்காங்க'ன்னு பயம் காட்டுறாரோ?
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: அக்., 16ல் கோவையில் நடக்கவுள்ள எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது, தேர்தல் பணிகளை துவக்குவது, ஓட்டு வங்கியை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்படும். அதேபோல், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் முடிவு எடுக்கப்படும்.
தே.ஜ., கூட்டணி இப்போதைக்கு காத்து வாங்கிட்டு தான் இருக்குது... சீக்கிரமா போய் துண்டு போட்டு இடம் பிடிச்சா, இவருக்கு மட்டும் ஒரு சீட் கிடைச்சாலும் கிடைக்கலாம்!
தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ராம சீனிவாசன் பேச்சு: நாட்டு மக்களுக்கு புதிய விடியல் ஆட்சியை பிரதமர் மோடிதான் தந்துள்ளார். விடியல் ஆட்சி என்று சொல்லும் தி.மு.க., வெட்கப்பட வேண்டும். இன்னும் ஏழு அமாவாசை கழிந்தால், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி எனும் பவுர்ணமி வரும். நாட்டின் பொருளாதாரம், 1.50 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 4.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. விரைவில், அமெரிக்க பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் அதிகமாகும்.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்ததில் இருந்து, இவங்களும் அமாவாசைகளை எண்ண ஆரம்பிச்சுட்டாங்களே!