PUBLISHED ON : அக் 25, 2025 12:00 AM

தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி எம்.பி., பேச்சு: தமிழகம்
தாண்டி, வேறு மாநிலங்களில் யாராவது ஒருவரின் பெயரை கேட்டால், அவர்களுடைய
ஜாதியையும் சேர்த்து சொல்வர். மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் ஜாதியே இல்லை என, நான் சொல்ல வரவில்லை. ஆனால், பெயரை
சொல்லும்போது ஜாதியை சேர்த்து சொல்ல வெட்கப்படக்கூடிய ஒரு மாநிலம் எது
என்றால் அது தமிழகம் தான். அதற்கு காரணம் ஈ.வெ.ராமசாமி. அதனால்தான் அவர்
என் ஹீரோ என்கிறேன். சமீபத்தில் லண்டன் போயிருந்த முதல்வர், அங்க
அம்பேத்கர் தங்கிய இல்லத்தை பார்வையிட்டாரே... அங்க இருந்த ஒரு படத்தில்,
ஈ.வெ.ரா., பெயரின் பின்னால், அவரது ஜாதியையும் குறிப்பிட்டிருந்தாங்க
தெரியுமா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: உர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, செயற்கை உரங்களுக்கு மாற்றாக, இயற்கை இடுபொருட்கள் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை முறையில் சிறுதானியம் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். இயற்கை முறையில் பசுந்தாள் உரம், உயிர் உரம் பயன்படுத்தும் அவசியத்தையும், யுக்திகளையும் விவசாயி களுக்கு அரசு கற்றுத் தர வேண்டும்.
செயற்கை உரம் தயாரிப்பவர்கள் தொழிலை இழுத்து மூடும் வகையிலான இவரது யோசனையை, அரசு ஏற்பது சந்தேகம் தான்!
சென்னை, மயிலாப்பூர் மேற்கு பகுதி அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் பேச்சு: தமிழகத்தில், எம்.ஜி.ஆர்., மூன்று முறை முதல்வராக இருந்தபோது, கருணாநிதியால் முதல்வராக முடியவில்லை. ஜெயலலிதா நான்கு முறை முதல்வராக இருந்தபோது, இரண்டு முறை தி.மு.க.,வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்காமல் வைத்திருந்தார். வரும் 2026 சட்டசபை தேர்தலில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன், இரண்டாவது முறையாக முதல்வர் அரியணையில் பழனிசாமி அமருவார். அப்போது, எ திர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சிதான் இருக்குமே தவிர, தி.மு.க., இருக்காது.
விஜய் கட்சியை மனசுல வச்சுதான் இப்படி பேசுறாரு... ஆனா, கழுவுற மீனில் நழுவுற மீனான விஜய், இவங்க வலையில் சிக்குவாரா?
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட, நெல் உற்பத்தி அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கு ஏற்ற வகையில், நெல்லை முழுமையாக கொள்முதல் செய்வதற்கான முன்னேற்பாடுகளை அரசு முன்கூட்டியே செய்யவில்லை. இதுவே, பல லட்சம் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து வீணாக முக்கிய காரணம்.
நெல் உற்பத்தியை அதிகரிப்பதில் அரசு காட்டிய ஆர்வத்தை, அதை பாதுகாப்பதில் காட்டியிருக்க வேண்டாமா?

