PUBLISHED ON : ஜன 31, 2026 03:43 AM

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை:
பார்லிமென்டில் உரையாற்றிய
ஜனாதிபதி திரவுபதி முர்மு, 'கடந்த ஓராண்டில், இந்தியா அடைந்த அதிவேக
பொருளாதார முன்னேற்றம், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளது'
என, தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் நாணய மதிப்பானது, சர்வதேச அளவில்
வீழ்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய
ரூபாயின் மதிப்பு, 91 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜனாதிபதி உரையின் வாயிலாக
மத்திய அரசு, தம்மை தாமே புகழ்ந்து கொள்வதை நாட்டு மக்கள்
உணர்ந்திருப்பதால், அவர்கள் ஏமாற மாட்டார்கள்.
அமெரிக்க டாலருக்கே
மதிப்பில்லாம போய் தானே, தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு போயிட்டு
இருக்கு!
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:
ஜனாதிபதி உரையில், மத்திய பா.ஜ., அரசு அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான நல்ல நிர்வாகத்தை மேற்கொண்டு வருவதை சுட்டிக்காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. அவரது உரையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்ட நேர்மையான அரசு மத்திய அரசு என்றும், உலக நாடுகளுக்கு பாலமாக இந்தியா உள்ளது என்றும், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் மட்டும் பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளதை வரவேற்று, பாராட்டுகிறேன்.
மத்திய அரசு தயாரித்த உரையை படித்த ஜனாதிபதிக்கு பாராட்டு தெரிவித்து, கூட்டணி கட்சியின் கடமையை கச்சிதமா நிறைவேற்றிட்டாரே!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
'ஆட்சிக்கு வந்ததும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்' என, வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றி வரும் தி.மு.க., அரசை, அரசு மருத்துவர்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். எனவே, முதல்வர் உடனடியாக தலையிட்டு, அரசு மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுகிறோம்.
இப்பவாவது, வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டால், முதல்வருக்கு இனிப்பு ஊட்டி விட தயாரா இருக்காங்க போல தெரியுதே!
சென்னை மாநகராட்சி காங்., கவுன்சிலர் சுகன்யா செல்வம் பேட்டி:
மத்திய சென்னை தி.மு.க., - எம்.பி., தயாநிதி தொகுதி மேம்பாட்டு நிதியில், சென்னை நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதைக்கு மேலே நடைமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சியின் எந்தவித அனுமதியும் இன்றி, இந்த மேம்பாலத்தின் இருபுறமும் தனியார் நிறு வனத்தின் விளம்பர பதாகைகள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விளம்பர பதாகைகள் திடீரென விழுந்து பொதுமக்களுக்கு ஏதும் உயிர்சேதம் ஏற்பட்டால் தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?
'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்பது தானே, நமது அதிகாரிகளின் வழக்கம்!

