PUBLISHED ON : பிப் 03, 2026 02:58 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு: இப்போது, புதிதாக சில
கட்சிகள் வந்திருக்கின்றன. எல்லாரும் எம்.ஜி.ஆர்., ஆக முடியாது. கரூரில்
நடிகர் விஜயை பார்க்க மக்கள் வந்தனர்; அதில், 41 பேர் இறந்து விட்டனர்.
திரும்பி பார்க்காமல் சென்று விட்டு, இதுவரை கரூருக்கு போகாமல்
இருக்கிறார். ஒரு தலைவன், தொண்டனுக்கு பிரச்னை என்றால், விட்டு விட்டு
ஓடிவிடக் கூடாது. விட்டு விட்டு ஓடிப் போகிறவர் ஒரு தலைவரா? இதே விஜய்,
இவங்க கூட்டணிக்கு வந்திருந்தால், '41 பேர் பலியாக காரணமே தி.மு.க., அரசு
தான்'னு பிளேட்டை திருப்பி போட்டிருப்பாரோ?
தமிழக மாணவர் காங்., தலைவர் சின்னதம்பி பேச்சு: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லுாரிகளிலும் மாணவர் சங்க தேர்தலை நடத்தினால் தான், மாணவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இல்லை யெனில், பல கல்லுாரிகளில் நிர்வாகத்திற்கும், மாணவர்களுக்கும் மோதல் போக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இதற்கு ஒரே தீர்வு, தமிழக அரசு, மாணவர் சங்க தேர்தலை நடத்தி, நிர்வாகிகளிடம் பொறுப்பை வழங்க வேண்டும்.
அந்த தேர்தல்லயும் நீங்களும், தி.மு.க., மாணவர் அணியும் சீட்டுக்கு அடிச்சுக்க மாட்டீங்களே? அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ அறிக்கை: இந்திய மீனவர்கள் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். நம் இந்திய எல்லைக்குள் வந்து மீன் பிடித்த வங்கதேச மீனவர்கள், 128 பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி, வங்கதேச மீனவர்கள் மீது காட்டும் கரிசனத்தை, நம் இந்திய மீனவர்கள் மீதும் காட்ட வேண்டும்.
உலகம் பூரா டூர் சுற்றும் இவங்க தலைவரான லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஒரு முறை இலங்கைக்கு போய், அந்த நாட்டு அரசுடன் தமிழக மீனவர்கள் பிரச்னை சம்பந்தமா பேசலாமே!
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா அறிக்கை: கடந்த 1952ம் ஆண்டு முதல் தமிழக சட்டசபையில், 'நந்தன் கால்வாய்; நந்தன் கால்வாய்' என முழங்கிய குரலுக்கு சொந்தக்காரரும், அப்போதைய விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமியின் கனவுத்திட்டம் தான், நந்தன் கால்வாய் திட்டம். நான் எம்.எல்.ஏ.,வானதும், சட்டசபையில் என் முதல் பேச்சில், நந்தன் கால்வாய் திட்டம் குறித்த கோரிக்கையை முன் வைத்தேன். அந்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் கனிவுடன் ஏற்று, அரசாணை வெளியிட்டதற்கு நன்றி.
இவர், 2021ல் கேட்டதற்கு, 2026ல் அரசாணை மட்டும் தான் வெளியிட்டிருக்காங்க... திட்டம் செயல்பாட்டுக்கு வர, எத்தனை வருஷங்கள் ஆகுமோ?

