PUBLISHED ON : பிப் 05, 2026 04:09 AM

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்தால், அது வளர்ச்சி அடைந்த தமிழகத்தை நாசப்படுத்தி விடும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். எது வளர்ச்சி, எதில் வளர்ச்சி... ஊழலில் ஊறித்திளைப்பது வளர்ச்சியா... ஊழல் பணத்தை அள்ளிக் குவிப்பது வளர்ச்சியா... சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டில் வளர்ச்சி, குற்றங்கள் பெருகுவதில் வளர்ச்சி. போதைப்பொருள் புழக்கத்தில் வளர்ச்சி... மதுவிற்கு அடிமையாக்குவதில் வளர்ச்சி. இந்த வளர்ச்சிகளை வீழ்ச்சி அடைய செய்ய, பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வரும். நாசமான தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுக்கும்.
தி.மு.க.,வுக்கு பதிலடி கொடுக்கும் சாக்கில், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்' என்பதை, அ.தி.மு.க.,வுக்கும் சுட்டிக்காட்டுறாரோ?
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பிற்கு பதிலாக, 'பயத்தில் வாழும் பெண்கள்' என்ற தலைப்பே, இன்றைய சூழலில் சரியானது முதல்வர் ஸ்டாலின் அவர்களே. சென்னையில், பீஹாரை சேர்ந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குடும்பத்தோடு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தி.மு.க., ஆட்சியில் சர்வ சாதாரணம் என்பது குற்ற வாளிகளுக்கு நன்றாக தெரிந்துள்ளது.
'சில மாசங்கள் ஜெயிலில் இருந்தால் போதும்... அப்புறமா, ஜாமினில் வந்துடலாம்' என்ற எண்ணமும், இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு:
முதல்வர் ஸ்டாலின், மக்களை பார்த்து, 'உங்கள் கனவை சொல்லுங்க' என்று கேட்கப்போக, மக்கள், 'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை முதல்வராக்குவதுதான் எங்கள் கனவு' என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.
அப்படி சொல்லியது, கண்டிப்பா, அ.தி.மு.க.,வினரா தான் இருக்கணும்!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:
அடிமைத்தனம் குறித்த முதல்வரின் விமர்சனத்திற்கு, பண்பற்று பேசியிருக்கிறது, பல்லுக்கும், சொல்லுக்கும் அடங்காத, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் நாக்கு. தங்கப்பல் கட்டியவன் சொல்வதெல்லாம் பொன்மொழி ஆகிவிடாது. அதுபோல் தலைமை என சொல்லி கொள்ளும், டில்லி அடிமை பேச்செல்லாம் பெருமையாகி விடாது என்பது, இன்னும், 90 நாட்களில் தெளிவாகத்தான் போகிறது.
ஒருகாலத்தில் பழனிசாமியை, 'மருது சகோதரரின் மறுவடிவம்'னு வர்ணிச்சிட்டு, இன்று முகாம் மாறியதும், இப்படி போட்டு தாக்குறாரே!

