PUBLISHED ON : பிப் 09, 2026 02:31 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர், டாக்டர் சரவணன் பேட்டி:
கடந்த, 2022ம் ஆண்டு சுதந்திர தின விழாவில், 'மதுரை காந்தி மியூசியம் சீரமைக்கப்படும்' என்ற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை அடுத்து, அதே ஆண்டு அக்டோபரில் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன. மூன்றரை ஆண்டுகளாக இந்த பணிகள் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், 2025 ஆகஸ்ட் மாதம் பணிகளை ஆய்வு செய்த, தமிழக சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், '12 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிந்து, 2025 அக்டோபரில் திறக்கப்படும்' என கூறினார். அவர் கூறிய தேதி கடந்து ஐந்து மாதங்கள் ஆகியும், இன்னும் மியூசியம் பூட்டியே கிடக்கிறது.
'ஊரக வேலை உறுதி திட்டத்தில், காந்தி பெயரை, மத்திய, பா.ஜ., அரசு நீக்கிடுச்சு'ன்னு குய்யோ, முய்யோன்னு குதிக்கிறவங்க, காந்தி மியூசியத்தை கண்டுக்காதது ஏன்?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: எம்.ஜி.ஆர்., - ஜெ., ஆகிய இரு பெரும் தலைவர்கள் ஆசியுடன், எதிரிகளும், துரோகிகளும் ஆச்சரியப்படும் வகையிலும், மக்கள் வரவேற்கும் வகையிலும், பா.ஜ., மற்றும் பிற கட்சிகளுடன் மாபெரும் கூட்டணியை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அமைத்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி, 234 தொகுதிகளில் வெல்வது லட்சியம்; 210 தொகுதிகளில் வெல்வது நிச்சயம்.
ஆனாலும், நடிகர் விஜயின், த.வெ.க.,வை இழுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டலையே!
தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி: 'தமிழகம் தலை நிமிரும்' என்ற பிரசாரத்தை முதல்வர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார். இதனால், பா.ஜ.,வினருடன் கூட்டணியில் இருக்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின், தலை தொங்கி உள்ளது. 'இந்தியாவின் இரும்பு மனிதர்' வல்லபபாய் படேல் போல், தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்.
வல்லபபாய் படேல், பல்வேறு சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இந்தியாவை கட்டமைத்தார். இவங்க தலைவரால, காங்கிரஸ் கோஷ்டிகளை ஒருங்கிணைக்க முடியுமா?
தமிழக, பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: கடந்த, 1975ல், ஜனநாயகத்தை குழி தோ ண்டி புதைக்கும் வகையில், அன்றைய காங்கிரஸ் பிரதமர் இந்திரா, நெருக்கடி நிலையை அறிவித்தார். இன்றைய முதல்வர் ஸ்டாலின் உட்பட, 500க்கும் மேற்பட்ட தி.மு.க., நிர்வாகிகளை கைது செய்து, சிறையில் பூட்டி கொடும் சித்ரவதை செய்து, அராஜகத்தில் ஈடுபட்டது காங்கிரஸ். ஆனாலும், தன்மானம், சுயகவுரவத்தை இழந்து, தேர்தல் ஆதாயத்திற்காக, தி.மு.க., தலைவர்கள் அடிமைகளாக டில்லி சென்று, ராகுலை பார்த்து கூட்டணிக்காக கெஞ்சி வருகின்றனர்.
தன்மானம், சுய கவுரவம் எல்லாம் பார்த்திருந்தா, 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை கழற்றி விட்ட, அ.தி.மு.க.,வுடன், அக்கட்சி இப்ப கூட்டணி சேர்ந்திருக்க முடியுமா?

