PUBLISHED ON : பிப் 21, 2026 03:04 AM

மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை: 'ஆந்திராவை போலவே
தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு தொகையை
அதிகரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை முன் வைத்து, தமிழக அனைத்து வகை
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் நடத்திய
போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை அதிகாலை, 1:00 மணி அளவில் சொந்த
ஊர்களுக்கு பஸ்களில் ஏற்றி அனுப்ப போலீஸ் துறை முயற்சி செய்தது.
மாற்றுத்திறனாளிகளை அலைக் கழித்து தாக்கி, சித்ரவதை செய்து மனித உரிமை
மீறலில் போலீசார் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது. போலீஸ் துறையை கையில்
வைத்திருக்கும் முதல்வர் தானே இதற்கு பொறுப்பு... அவரை பத்தி இவர் ஒரு
வார்த்தைக் கூட பேச மாட்டேங்கிறாரே!
அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: கடந்த லோக்சபா தேர்தலில், 2 சதவீதம் ஓட்டுகள் வாங்கிய தே.மு.தி.க.,வுக்கு தற்போது ஒரு சதவீதம் ஓட்டு தான் உள்ளது. முதல்வரின் மருமகன் சபரீசன், அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து, தி.மு.க., கூட்டணியில் இணைத்துள்ளார். அன்று தி.மு.க.,வை தீயசக்தி என்று பிரேமலதா கூறினார். இன்று, அது துாய சக்தி ஆகி விட்டதா. விஜயகாந்த் திருமண மண்டபத்தை இடித்த தி.மு.க.,வோடு கூட்டணி வைத்துள்ளதாக தே.மு.தி.க., தொண்டர்கள் குமுறி வருகின்றனர்.
இனி, பிரேமலதாவின் பார்வையில், இவங்களது அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தீய சக்தியா மாறிடுமே!
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், தி.மு.க.,வின் இறுதி ஏமாற்று சுய விளம்பர பட்ஜெட். 142 நிமிடங்கள் மத்திய பா.ஜ., அரசை விமர்சித்த நிலையில், தி.மு.க., ஆட்சியின் தோல்விகளை மறைக்க முடியவில்லை. உட்கட்டமைப்பு, விவசாயம், இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம் என, பட்ஜெட்டில் எதுவும் உருப்படியாக இல்லை.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், இலவச வாக்குறுதிகள் அடங்கிய மினி பட்ஜெட்டே வெளியாகும் பாருங்க!
தமிழக முன்னேற்ற காங்., தலைவர் அருள்தாஸ் பேட்டி: முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகையாக, 10,000 ரூபாய் கொடுப்பார் என, எதிர்பார்த்தேன்; ஆனால், 5,000 ரூபாய் வழங்கி குறை வைத்துவிட்டார். குறை வைப்பது தி.மு.க.,வின் வழக்கம். தேர்தலுக்காக, பெண்களின் ஓட்டுகளை வாங்குவதற்கான திட்டம் தான் இது. மேலும், இது மக்களை ஏமாற்றுகிற அரசியல்.
ஆட்சிக்கு வந்ததும், 23 மாதங்களாக மகளிர் உரிமைத் தொகையை கொடுக்காமல் ஏமாற்றியவங்க, இப்ப அதிகமா கொடுத்து ஏமாத்துறாங்கன்னு சொல்றாரோ?

