PUBLISHED ON : மார் 09, 2026 02:01 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் பேட்டி: தி.மு.க.,வினர், 2021 சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 3.50 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம்' என்றனர். ஆனால், 68,000 பேரை தான் இதுவரை நியமித்துள்ளனர். அதேபோல், 'கல்லுாரி மாணவர்கள் வாங்கிய கல்வி கடனை ரத்து செய்வோம்' என்றனர். இதுவரை ஒரு பைசா கூட ரத்து செய்யவில்லை. மேலும், '12 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது' என்று தற்போது கூறுகின்றனர். ஆனால், ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூட தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வரவில்லை.
'தி.மு.க., அரசு எதுவுமே செய்யலை'ன்னு சொல்றாரே... வாக்குறுதியே தராம, உதயநிதியை துணை முதல்வராக்கியது எல்லாம் சாதனை இல்லையா?
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: நீலகிரி மாவட்டம், கூடலுாரில், பல தலைமுறைகளாக, சிறு நிலங்களில் விவசாயம் செய்து வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை, 'ரிசர்வ் பாரஸ்ட்' ஆக மாற்ற, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலங்கள் தான், அவர்களின் வாழ்வாதாரம். வன பாதுகாப்பு என்ற பெயரில், அதை பறிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது.
வனத்தில் விவசாயம் பண்ணிட்டு, அப்புறம் வனவிலங்குகள் வந்து நாசம் பண்ணிடுச்சுன்னு குறை சொல்றாங்களே!
தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் சபாபதி மோகன் அறிக்கை: நடிகர் விஜய், தன்னை அரசு முடக்கி வைத்துள்ளதாக கூறுகிறார். அவர் வெளியில் வருவதே, 15 நாட்களுக்கு ஒருமுறை தான். கடந்த, 12 ஆண்டுகளாக, தி.மு.க., இளைஞரணியை கட்டிக் காத்து வரும் உதயநிதியிடம், நடிகர் விஜய் பயிற்சி எடுக்க வேண்டும்.
எதிர்காலத்துல தனக்கு போட்டியா இருக்கக்கூடிய விஜய்க்கு, உதயநிதி பயிற்சி தர முன்வருவாரா?

