PUBLISHED ON : மார் 10, 2026 02:23 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக, மத்திய அரசு வழங்கி வந்த நிதி ஒதுக்கீட்டை, கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக குறைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு பதவி ஏற்றதில் இருந்து, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பல துறைகளின் நிதியை குறைத்து, தமிழக மக்களை வஞ்சிக்கிறது. சில துறைகளுக்கு நிதியே வழங்கவில்லை. ஆதிதிராவிட மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை எடுத்து தான், சமீபத்தில், 1.31 கோடி பெண்களுக்கு தலா, 5,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டதா சொல்றாங்களே!
தமிழக காங்., துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி அறிக்கை: 'ராகுலை மிரட்டி தி.மு.க., கூட்டணிக்கு சம்மதிக்க வைத்து விட்டனர்' என, சில ஊர் குருவிகள் தவறான தகவல்களை பரப்பி கொண்டு இருப்பது அடிமைத்தனம். ராகுலை மிரட்டி பணிய வைக்கும் வல்லமை, தமிழகத்தில் எந்த கொம்பாதி கொம்பனுக்கும் கிடையாது. காரணம், 56 அங்குல மார்பு கொண்ட பிரதமர் மோடியின் மிரட்டலுக்கே அஞ்சாதவர் ராகுல்; அவர் வீரத்தாய் இந்திராவின் பேரன்.
தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகினால், தமிழக காங்.,கை உடைத்து விடலாம் என, ஆளுங்கட்சி திட்டமிட்டது மிரட்டல் இல்லையா?
தமிழக முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் அருள்தாஸ் பேட்டி: 'சட்டசபை தேர்தலில், 200க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். 'அ.தி.மு.க., 210 தொகுதிகளில் வெற்றி பெறும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். தற்போது, அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உருவெடுத்து வருகிறது. இதனால், தி.மு.க.,வுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவு தான், ஆட்டோவில் சென்ற கட்சி தலைவர்களை எல்லாம் அழைத்து, தி.மு.க., கூட்டணியில், 21 கட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தி.மு.க.,வை தேடி ஆட்டோவில் போறவங்க, சீக்கிரமே சொகுசு காருக்கு மாறிடுறாங்க... இது தெரியாம பேசுறாரே இவரு...!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் பேச்சு: தி.மு.க., கூட்டணியில் முஸ்லிம் கட்சிகளும், கிறிஸ்துவ கட்சிகளும், ஜாதி, சமுதாய கட்சிகளும் நிரம்பி வழிகின்றன. எங்கள் கூட்டணி மதச்சார்பற்றது என, தி.மு.க., பேச்சாளர்கள் திரும்ப திரும்ப பேசி வருகின்றனர். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக, தி.மு.க.,வின் செயல் பாடு உள்ளது. எந்த அடிப்படையில் மதச்சார்பற்ற கூட்டணி என்பதற்கு, தி.மு.க., பேச்சாளர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்.
ஜாதி பற்றி பேசிப் பேசியே, 50 வருஷமா வெற்றிகரமா அரசியல் நடத்திட்டு வருது தி.மு.க., பா.ஜ.,வால இது முடியுமா?

