PUBLISHED ON : மார் 13, 2026 03:16 AM

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பரப்புரை செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு:
தமிழக அமைச்சர் ரகுபதி, த.வெ.க.,வை ஆளில்லாத வீடு என்கிறார். அவர்
கூரில்லாத அம்பு; செல்வாக்கில்லாத பேர்வழி. மணல் மாபியாவின் மடியில்
படுத்துக் கிடந்து த.வெ.க.,வை காயப்படுத்துகிறார். இதுபோன்ற மலினமான
அரசியலை அவர் தவிர்த்து கொள்வது நல்லது. நித்தம் நித்தம் நிறம் மாறும்
பச்சோந்தி அவர்; பச்சோந்திக்கு தேவை நிதானம். ம.தி.மு.க., - அ.தி.மு.க.,
அப்புறம் தி.மு.க., ஆதரவாளரா இருந்துட்டு, கடைசியா விஜய் கட்சியில் சங்கமம்
ஆகியிருக்கும் இவர், பச்சோந்தி பற்றி பேசலாமா?
த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: பொது மக்களுக்கும்,வணிக நிறுவனங்களுக்கும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பதுக்கல் மற்றும் விலை உயர்வு ஏற்படாமல் தடுக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களும், வணிக நிறுவனங்களும் பாதிக்காத வண்ணம், மத்திய அரசும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நீடித்து, மக்களின் கோபம் மத்திய அரசுக்கு எதிராக திரும்பட்டும்னு மாநில அரசு, எதையும் கண்டுக்காம இருந்துடுமோ?
தமிழக பாஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: 'குஜராத் மாநில காங்கிரசில் இருந்து கொண்டே, சிலர் பா.ஜ.,வுக்கு வேலை செய்கின்றனர். கட்சியில் இருந்து, 30 பேரை நீக்கப் போகிறேன்' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கண்ணீர் விடாத குறையாக பேசியுள்ளார். அவரது கருத்தை கூர்ந்து கவனித்தால், குஜராத் மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளை நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டு, டில்லி காங்கிரசில் ராகுலும், அவரது தாயார் சோனியா, சகோதரி பிரியங்கா மட்டும் தான் இருப்பர்.
அப்படி என்றால், 'தமிழக காங்கிரசிலும் பா.ஜ., ஆதரவாளர்கள் இருக்காங்க'ன்னு இவர் சொல்றாரா?
பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை: ஜனாதிபதி ஒரு மாநிலத்துக்கு வருகிறார் என்றால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதும், அவருக்கான மரியாதையை கொடுப்பதும், நாட்டில், 140 கோடி மக்களுக்கும் மரியாதை கொடுப்பதற்கு சமமானது. அவரது நிகழ்ச்சியை அலட்சியமாக நடத்துவது, இந்திய மக்களை அவமதிக்கும் செயல். பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண்ஜனாதிபதியை, மேற்கு வங்க முதல்வர் மம்தா திட்டமிட்டு அவமதித்துள்ளார். இதற்காக, மம்தா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
அட இவங்க வேற... 'நான் மேற்கு வங்கத்துக்கு வந்ததே தப்பு'ன்னு ஜனாதிபதியையே மன்னிப்பு கேட்க சொன்னாலும் சொல்வாங்க, மம்தா!

