PUBLISHED ON : மார் 22, 2026 02:38 AM

அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி பேட்டி: பழனிசாமியும்,
பன்னீர்செல்வமும் நியமிக்கப் பட்ட முதல்வர்களாக இருந்தவர்கள் தான். இதில்,
பழனிசாமி இன்று வரை அ.தி.மு.க.,வை பாதுகாத்து வருகிறார். ஆனால், 54 ஆண்டு
காலமாக எதிரியாக பார்த்த தி.மு.க.,விலேயே பன்னீர்செல்வம் இணைந்துள்ளார்.
நாங்கள் தொண்டர்கள் எனும் தர்மத்தோடு சேர்ந்து இருக்கிறோம். ஆனால், அதர்மம்
எனும் தி.மு.க.,வோடு பன்னீர்செல்வம் இணைந்து உள்ளார். தர்மமே ஜெயிக்கும்.
உங்களிடம் கெஞ்சி கூத்தாடியும் அவரை சேர்த்துக்க மறுத்துட்டதால, எதிரிக்கு
எதிரி நண்பன் என்ற கொள்கையில் தி.மு.க.,வில் போய் சேர்ந்துட்டாரு!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் செவிலியர் கல்லுாரிகளை துவங்க, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் மிகுந்த ஆர்வம் காட்டுவதை பார்க்கிறோம். அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், செவிலியர் பணியிடங்களை உருவாக்குவதில் மட்டும் ஆர்வம் காட்ட மறுப்பது தான், மிகுந்த வருத்தமளிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளா அசந்து துாங்கிட்டு, ஆட்சி முடியும் நேரத்தில் அவசரம் காட்டி என்ன புண்ணியம்?
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: எப்போதும் போல இம்முறையும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மக்களுக்கு சேவை செய்ய பணம் தேவையில்லை; தன்னலமற்ற உண்மையும், நேர்மையாக பணியாற்றும் மனமும் இருந்தாலே போதும் என்பதை நிரூபிக்க தயாராக இருக்கிறோம். ஏற்கனவே எங்கள் கட்சியினர் தேர்தலில் நிற்க, மக்கள் தங்களால் இயன்ற நிதியை கொடுத்து வலிமைப்படுத்தியது போல், இம்முறையும் உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி, எங்கள் கரங்களை வலுப்படுத்துங்கள்.
பல தேர்தல்களில் உங்களுக்கு மக்கள் நிதி வழங்கியும், ஒருத்தர் கூட ஜெயித்து, உங்க கரங்கள் வலுப்பட்ட மாதிரி தெரியலையே!
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தை எப்படியெல்லாம் தி.மு.க., ஆட்சி சீரழித்தது என்பது குறித்தும், போதை பொருட் கள், சாராயம் போன்றவற்றால் தமிழர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதையும் நாங்கள் சொல்லி கொண்டிருக்கிறோம். மறுபுறம் சோதனைகளை மறைக்க, இலவசங்களை சாதனைகளாக வாரி இறைத்து கொண்டிருக்கின்றனர். தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அழிவை தந்த தி.மு.க., அரசை துாக்கி எறிவர்.
இவங்க என்ன தான் தொண்டை தண்ணீர் வற்ற பிரசாரம் செய்தாலும், கடைசியில் இலவசங்களுக்கு மயங்கி தான் மக்கள் ஓட்டளிக்க போறாங்க!

