PUBLISHED ON : ஏப் 04, 2026 03:31 AM

அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை:
கடந்த
2021ல், 'ஆட்சிக்கு வந்தால், காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்
தருவோம்' என அறிவித்த தி.மு.க., அரசு, ஐந்தாண்டுகளாக அதை தரவே இல்லை.
ஐந்தாண்டுகளில் விளம்பரத்துக்காக மட்டும், 400 கோடி ரூபாய் செலவு
செய்தவர்கள், அந்த பணத்தில் காஸ் மானியம் தந்திருக்கலாம். தற்போது,
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'ஆண்டுக்கு மூன்று காஸ் சிலிண்டர்கள்
இலவசம்' என அறிவித்துள்ளார். அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை மணக்கும்
மல்லிகைப்பூ; தி.மு.க., அறிக்கை வெறும் காகிதப்பூ. '
இப்ப நிலவும் கடும்
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு, மூன்று இலவச சிலிண்டர்கள் என்ற
வாக்குறுதி, அ.தி.மு.க., வெற்றிக்கு அருமையா கைகொடுக்கும்'னு சொல்ல
வர்றாரோ?
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:
தமிழகத்தில் உள்ள, 68 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது. தனியார், சுற்றுலா பஸ்கள், சரக்கு வாகனங்கள் நீண்ட துாரம் பயணிக்கும் போது பல சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டியிருப்பதால், கட்டணம் பெரும் சுமையாக உள்ளது. கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து, மக்கள் போக்குவரத்துக்கு நிவாரணம் வழங்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுங்கச்சாவடி கட்டணங்களுக்கு பயந்தே, பலரும் கார்கள் வாங்க பயப்படுறாங்க; வாங்கியவங்களோ, வித்துடலாமான்னு யோசனை பண்ணிட்டு இருக்காங்க!
தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் பேச்சு:
ஓமலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் இளங்கோவன் மிக எளிமையானவர். அவரை, வேட்பாளராக்கும்படி, கட்சி தலைமையிடம் நான் பரிந்துரைக்கவில்லை. தி.மு.க., தலைமை எடுத்த முடிவு. அதை நாங்கள் செயல்படுத்துகிறோம். ஆண்டவன் சொல்றான்; நான் கேட்கிறேன்.
இவர் ஆண்டவன் என கூறுவது, தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினையா அல்லது கடவுளையா?
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேச்சு: திருச்சி மாவட்ட தேர்தல் களத்தில் பிரபல நடிகரும், பெரும் செல்வந்தர்களும் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர். இத்தகைய சவாலான சூழலில், நடுத்தர மற்றும் சாதாரண நிலையில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் தங்களுக்குள் வேற்றுமைகள் இருந்தால், அதை மறந்து, ஒற்றுமையுடன் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றியை ஈட்ட முடியும். ஊர் கூடி தேர் இழுப்பது போல், அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
திருச்சி கிழக்கில் நடிகர் விஜய் போட்டியிடுவது, அமைச்சர் நேரு தரப்புக்கு அச்சத்தை தந்திருப்பது நல்லாவே தெரியுது!

